![Mars](http://media.assettype.com/kalkionline%2F2024-06%2Fabcec2b6-b1a8-4b2c-b057-891503e19996%2Fyjthdt.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
Mars, சிவப்பு கிரகம், நீண்ட காலமாகவே விஞ்ஞானிகளையும் விண்வெளி ஆர்வலர்களையும் அதிகமாகக் கவர்ந்துள்ளது. பூமிக்கு அடுத்தபடியாக மனிதன் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை தேடிக் கொண்டிருக்கும் இந்த கிரகத்தில், வெறும் 5 நொடிகள் நீங்கள் இருந்தால் என்ன ஆகும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.
நீங்கள் செவ்வாய் கிரகத்தில் நுழையும்போதே பூமிக்கும் இந்த கிரகத்திற்கும் உண்டான வேறுபாட்டை உணர்வீர்கள். அதாவது செவ்வாய் கிரகம் ஒரு மெல்லிய வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது. முக்கியமாக கார்பன் டை ஆக்சைடு மற்றும் மிகவும் குறைவான ஆக்ஸிஜனால் இது நிரப்பப்பட்டிருக்கும். எனவே செவ்வாய் கிரகத்தில் உங்களால் சுவாசிப்பது மிகவும் கடினம். பூமியிலிருந்து சுமார் 1 லட்சம் அடி உயரத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சுவாசிப்பது சாத்தியமற்றது.
செவ்வாய் கிரகத்தில் நாம் கவனிக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், அதன் தட்பவெட்ப நிலை. அதன் சராசரி வெப்பநிலை -60 டிகிரி செல்சியஸ். 5 வினாடிகள் நீங்கள் அங்கு செலவழித்தால், உங்களது எலும்புகள் கூட குளிரால் நடுங்குவதை நீங்கள் உணர்வீர்கள். மேலும் அந்த கிரகத்தின் மெல்லிய வளிமண்டலம் வெப்பத்தை திறமையாக தக்க வைக்க முடியாது என்பதால், விரைவான வெப்பநிலை ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கும். எனவே சாதாரணமாக பூமியில் சுற்றித் திரிவது போல அங்கு உங்களால் ஜாலியாக இருக்க முடியாது.
பூமியுடன் ஒப்பிடும்போது செவ்வாய் கிரகம் பலவீனமான ஈர்ப்பு விசையைக் கொண்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஈர்ப்புவிசை பூமியுடன் ஒப்பிடுகையில் தோராயமாக 38 சதவீதமே உள்ளது. எனவே அங்கு நீங்கள் லேசாக குதித்தாலே அப்படியே மிதக்கலாம். அங்கு சுற்றிப் பார்ப்பதற்கும், ஏதேனும் வேலை செய்வதற்கும் குறைவான ஆற்றல் மற்றும் முயற்சியை தேவைப்படும். இது உங்களுக்கு அதிக சுறுசுறுப்பு மற்றும் இயக்கத்தை எளிதாக உணரச் செய்யும். லேசாக ஒரு அழுத்தம் கொடுத்தாலே ஹல்க் போல தாவி குதிக்கலாம்.
செவ்வாய் கிரகத்தில் நீங்கள் 5 நொடிகளை செலவழிப்பதற்கு முன் உங்களது உடல் நலம் மற்றும் பாதுகாப்பு அபாயங்களை கருத்தில் கொள்வது அவசியம். செவ்வாய் கிரகத்தின் மெல்லிய வளிமண்டலம் சூரியன் மற்றும் காஸ்மிக் கதிர்களில் இருந்து அதிக அளவிலான கதிர்வீச்சை உங்கள் மீது படச்செய்யும். எனவே பூமியில் இருப்பது போல எந்த பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் நீங்கள் அங்கு இருந்தால், உங்களுக்கு சரும பாதிப்புகள் ஏற்படலாம்.
எனவே நம்மால் அங்கு பாதுகாப்பு உடை மற்றும் உபகரணங்கள் இல்லாமல் இருப்பது சாத்தியமற்றது. இருப்பினும் நாம் ஏன் அங்கு வாழ்வதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்றால், செவ்வாய் கிரகத்தில் நம்மால் பூமியில் இருப்பது போல சாதாரணமாக இருக்க முடியவில்லை என்றாலும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படாத வகையில் காலனிகளை அமைத்து நம்மால் அங்கு வாழ முடியும். இருப்பினும் இதுவரை அங்கு நீர் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எதிர்காலத்தில் நீர் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழும் கனவு நனவாகும்.
சொல்ல முடியாது, எதிர்காலத்தில் உங்களது பேரக்குழந்தைகள் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.