66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய பேரழிவு நடந்தது. சுமார் 10 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு விண்கல் பூமியை பலமாகத் தாக்கியது. இது நாம் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது. இந்தத் தாக்கத்தின் விளைவாக டைனோசர்கள் உட்பட பூமியில் வாழ்ந்த 75%-க்கும் மேற்பட்ட விலங்கு மற்றும் தாவர இனங்கள் முற்றிலும் அழிந்து போயின. அப்படி அழியும்போது அந்த நாள் எப்படி இருந்திருக்கும் தெரியுமா?
விண்கல் தாக்குதல்: அப்போது இயற்கை எழில் கொஞ்சிய பூமியில் ஒரு பிரகாசமான ஒளி தோன்றியது. இது அதிபயங்கர ஓசையுடன் பூமியை நோக்கி வேகமாக வந்து, மெக்சிகோவின் யுகடன் தீபகற்பத்தைத் தாக்கியது. இந்த தாக்கத்தின் விளைவாக பூமி மொத்தமாக அதிர்ந்து சுனாமிகள் உருவாகின, தீ மலமலவென பரவியது மற்றும் பெரிய அளவிலான தூசிகள் வளிமண்டலத்தை முற்றிலுமாக மூடியது.
இருள் சூழ்ந்தது: தூசி மேகங்கள் ஒட்டுமொத்த வானத்தையும் மூடி சூரிய ஒளி பூமியினுள் வராமல் தடுத்தது. இதனால் பூமியே இருளில் மூழ்கியது. பூமியின் வெப்பநிலை கணிசமாகக் குறைந்து, பெரும்பாலான இடங்கள் உறையத் தொடங்கின. தாவரங்களுக்கு போதிய சூரிய ஒளி கிடைக்காததால் உணவுச் சங்கிலி முற்றிலுமாக சீர்குலைந்து பல உயிரினங்கள் பசியால் இறந்து போயின.
டைனோசர்களின் அழிவு: டைனோசர்கள் அந்த காலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய விலங்கு இனமாகும். இந்த பிரம்மாண்ட விண்கல் தாக்கத்தை அவற்றால் தாங்க முடியவில்லை. பெரும்பாலான டைனோசர்கள் உணவு, தங்குமிடம் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் இறந்து போயின. இதில் சில டைனோசர் இனங்கள் தப்பிப் பிழைத்தாலும் காலப்போக்கில் பறவைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது.
புதிய உலகம்: பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு தூசி மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சூரிய ஒளி மீண்டும் பூமியை அடைந்தது. காலநிலை மெதுவாக சீராக்கி புதிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் தோன்றத் தொடங்கின. பூமி மீண்டும் பல உயிரினங்களால் நிரம்பியது. பாலூட்டி இனங்கள் ஆதிக்கம் செலுத்தும் இனங்களாக மாறின. அதில் மனிதனும் அடங்குவான்.
டைனோசர்களின் அழிவு என்பது பூமியின் வரலாற்றில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய திசைத் திருப்பமாகும். இதன் காரணமாகவே புதிய உலகம் தோன்றியது. இன்று நாம் காணும் இந்த பூமி அப்போது நடந்த பயங்கரமான விளைவினாலேயே ஏற்பட்டது எனலாம் . மனிதர்கள் உருவாவதற்கும் அந்தப் பேரழிவே காரணமாக இருந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.