பூமியை நிலையாக வைத்திருக்க உதவும் புவியீர்ப்பு விசை திடீரென இல்லாமல் போகும் ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். இப்படியெல்லாம் நடக்க சாத்தியமே இல்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அத்தகைய நிகழ்வின் சாத்தியமான விளைவுகளை ஆராயும் பதிவுதான் இது. புவியீர்ப்பு விசை என்பது நமது பிரபஞ்சத்தை வடிவமைப்பதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இப்பதிவில் இப்புவிசை திடீரென இல்லாமல் போனால் ஏற்படும் நிகழ்வுகளைப் பார்க்கலாம்.
ஈர்ப்பு விசை திடீரென இல்லாமல் போனால், உலகமே உடனடி குழப்பத்தில் மூழ்கும். இதுவரை புவியீர்ப்பு விசையால் இழுத்துப் பிடிக்கப்பட்ட பொருட்கள் சுதந்திரமாக மிதக்க ஆரம்பிக்கும். கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் தரையில் இருந்து பிரிந்து மிதக்கும். இது பரவலான அழிவு மற்றும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தும். நமது பூமியின் உட்கட்டமைப்புகள் அனைத்தும் பயனற்றதாகி நாம் கற்பனை செய்ய முடியாத அழிவுகளை ஏற்படுத்தும்.
புவியீர்ப்பு விசை இல்லாமல் பூமி தனது சமநிலையை இழந்து விண்வெளியில் தன் இஷ்டத்திற்கு நகர ஆரம்பிக்கும். பூமி உட்பட நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் கணிக்க முடியாத பாதையில் விண்வெளியில் சீறிப்பாய்ந்து செல்லும். சந்திரனும் அதன் சுற்றுப் பகுதியில் இருந்து விடுபட்டு பூமியை விட்டு விலகிச் செல்லும்.
பூமியில் உள்ள நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்புகளை பராமரிப்பதில் புவியீர்ப்பு விசை முக்கிய பங்கு வகிக்கிறது. தாவரங்களும் விலங்குகளும் புவியீர்ப்பு விசையின் கீழ் செழித்து வளர்கின்றன. அது இல்லாத பட்சத்தில், பூமியில் வாழ்க்கைமுறை கடுமையாக பாதிக்கப்படும். புவியீர்ப்பு விசையை நம்பி இருக்கும் தாவரங்கள் வளர முடியாமல் உயிர் வாழப் போராடும். விலங்குகளாலும் சரி வர இயங்க முடியாது என்பதால், வேட்டையாட முடியாமல் விலங்குகளும் முற்றிலுமாக அழியும் வாய்ப்புகள் உள்ளன.
மனித உடல்கள் புவியீர்ப்பு விசையின் கீழ் செயல்படும் வகையிலேயே பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. புவியீர்ப்பு விசை இல்லாததால் அது நமது உடலின் பல விளைவுகளை ஏற்படுத்தும். நமது ரத்தத்தை இதயம் சரியானபடி பம்ப் செய்ய புவியீர்ப்பு விசையையே நம்பி இருக்கிறது. இதனால் ரத்தம் உடல் பாகங்களுக்கு செல்வது கடினமாகும். மேலும், தசை மற்றும் எலும்புகள் நமது எடையைத் தாங்குவது பலவீனமடைந்து நம் உடல்நிலையை மோசமாக்கும். எனவே நம்மைச் சுற்றி என நடக்கிறது என்பதே தெரியாமல் பல உளவியல் பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடலாம்.
புவியீர்ப்பு இல்லாத உலகத்தை நினைத்துப் பார்ப்பது கற்பனையாக இருக்கலாம், ஆனால் இது நமக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்றுத் தருகிறது. நம் வாழ்க்கை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் உணர வேண்டும். குறிப்பாக இயற்கை சார்ந்த விஷயங்கள் நமது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொண்டு சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும்.