திடீரென உலகில் தொழில்நுட்பம் செயல்படாவிட்டால் என்ன நடக்கும்? 

Technology
Technology
Updated on

இன்றைய நவீன உலகில் நாம் தொழில்நுட்பத்தை அதிகம் நம்பி இருக்கிறோம். தகவல் தொடர்பு, வணிகம், போக்குவரத்து பொழுதுபோக்கு என அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுகிறது. திடீரென ஒரு நாள் உலகில் உள்ள அனைத்து தொழில்நுட்பமும் செயல்படாமல் போனால் என்ன நடக்கும்? 

கற்பனை செய்து பாருங்கள் ஒருநாள் காலையில் எழுந்திருக்கிறீர்கள். உங்கள் ஸ்மார்ட்போன் வேலை செய்யவில்லை. இன்டர்நெட் செயல்படவில்லை. டிவி, கம்ப்யூட்டர் எதுவும் இயங்கவில்லை. ATM, UPI, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு எதையும் பயன்படுத்த முடியவில்லை. விமானங்கள், ரயில்கள், பேருந்துகள் என எதுவுமே ஓடவில்லை என்றால் எப்படி இருக்கும்? 

இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் மக்கள் அனைவருமே தொடக்கத்தில் குழப்பத்தை அனுபவிப்பார்கள். தகவல் தொடர்பு இல்லாமல் ஒருவரை ஒருவர் எவ்வாறு தொடர்பு கொள்வது என்று தெரியாமல் தவிப்பார்கள். வணிகங்கள் மொத்தமாக முடங்கிவிடும். பொருளாதாரம் நாம் எதிர்பாராத அளவு வீழ்ச்சியை சந்திக்கும். 

மருத்துவமனைகள், தீயணைப்பு நிலையங்கள், காவல் நிலையங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளும் பாதிக்கப்படும். மின்சாரம் தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். ஏனெனில் இவற்றில் பயன்படுத்தப்படும் எல்லா விஷயங்களுமே தொழில்நுட்பத்தை நம்பி இருக்கின்றன. 

நகரங்கள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். பயத்தில் மக்கள் கடைகளில் பொருட்களை அதிகமாக வாங்கக் குவிவார்கள். இதனால் கடைகளில் பொருட்கள் விரைவாக தீர்ந்துவிடும். மக்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அது கலவரமாக மாறலாம். இத்தகைய சூழ்நிலை மக்களின் மனநிலையை வெகுவாக பாதித்து பயம், பதட்டம், கோபம் போன்ற உணர்ச்சிகளில் அவர்களை சிக்க வைக்கும். 

தொழில்நுட்பம் இல்லாமல் மருத்துவமனை சேவைகள் பாதிக்கப்படும். இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கடினம் ஏற்பட்டு பல உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படலாம். 

இதையும் படியுங்கள்:
மிகப்பெரிய தொழில்நுட்ப சாதனைக்கு வழிகாட்டிய குட்டிப் பறவை!
Technology

இதற்கு முன்னர் இருந்த தொழில்நுட்பங்கள் வேலை செய்யவில்லை என்பதால், அதற்கு மாற்றாக புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதற்கு நீண்ட காலம் ஆகலாம். நமது சமூக அமைப்பு முற்றிலுமாக மாறுபடும் வாய்ப்புள்ளது. 

தொழில்நுட்பம் இல்லாத உலகத்தை கற்பனை செய்து பார்ப்பதற்கு, பெரிய பாதிப்புகள் இல்லாதது போல தோன்றினாலும், அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும். எனவே தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அதேநேரம் தொழில்நுட்பம் இல்லாமல் வாழும் திறனையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். 

logo
Kalki Online
kalkionline.com