

உலகில் ஆண், பெண் இருவரும் சரிசமமாக இயங்குவதே படைப்புக்கான அர்த்தமாகும். ஆணை விட, பெண் ஒரு படி பலமற்றவள் என்ற காரணத்தினால் ஆணுக்கும் பெண்ணுக்கும் தகுந்த வேலைகளை முன்னோர்கள் பிரித்து வைத்து, அதன்படி இயங்கியது கற்கால உலகம். தற்போது நாகரிகங்களும் அறிவியல் முன்னேற்றங்களும் முன்னேற முன்னேற ஆணுக்குண்டான அதே வலிமை பெண்ணுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட, பணிகளும் சரிசமமாக ஆகிவிட்டது என்றாலும், உலக அளவில் ஆண்களே பெண்களுக்கு பாதுகாவலராக இருந்து வருவது மறுக்க முடியாத உண்மை.
சில இடங்களில் ஆண்கள் தவறான நோக்கில் பெண்களை சீரழிவு செய்து சில சமயங்களில் கொலையும் செய்வது வேதனைப்பட வேண்டிய ஒன்று. பாலில் சிறு நஞ்சு கலந்தாலும் அந்தப் பால் கெட்டுவிடுவது போல, சில ஆண்கள் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த ஆணினமே தவறிழைத்தவர்களோ என்னும் மனப்பான்மையிலிருந்து விலகி நல்ல மனம் கொண்ட ஆண்களை வரவேற்போம். ஒரு நல்ல ஆண் என்பதற்கான அடையாளம் என்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
நம்முடனேயே பயணிக்கும் நல்ல ஆணை அடையாளம் காண சில பொதுவான, ஆனால் ஆழமான குணாதிசயங்கள் இருக்கின்றன. ஆனால், இவை ஒவ்வொருவர் பிறந்து வளரும் சூழலுக்கேற்ப மனிதர்தோறும் மாறலாம். ஆனால், உண்மையில் நம்பகத்தன்மை, மதிப்பு, பொறுப்பு போன்ற அடிப்படை குணங்கள் எப்போதும் பொதுவாகப் பொருந்தும் எனலாம்.
ஒரு ஆணிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன?
1. தங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர், சக பெண்ணை, பெண்ணின் உணர்வுகளை, எல்லைகளை மதிப்பவர். பிறரையும் மரியாதையுடன் நடத்துபவர். இதுவே நல்லதொரு ஆண் குணத்தின் முக்கிய அளவுகோலாக உள்ளது.
2. பொறுப்புகளை ஏற்றுக்கொள்பவர், தனது செயல்களுக்கு தானே முழு பொறுப்பேற்பார். ஏதேனும் தவறு செய்தால் அதை நேர்மையாக ஒப்புக்கொள்வதுடன் அதை சரி செய்யவும் முயற்சிப்பார்.
3. நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் இருப்பார். எந்த விஷயத்திலும் பொய் சொல்லாமல், விளைவுகள் பற்றி சிந்திக்காமல் உண்மையாகப் பேசுவார். பிறரது உணர்ச்சிகள், கருத்துகள் பற்றி திறந்த மனதுடன் வெளிப்படையாக பகிர்வார்.
4. பெண்ணின் கனவுகளை புரிந்துகொள்ள முயற்சி செய்பவர், பெண்ணின் பிரச்னைகள், கனவுகள், விருப்பங்களை கவனமாகக் கேட்பார். எந்த உணர்வுகளையும் அலட்சியம் செய்ய மாட்டார்.
5. எந்த சூழலிலும் நிலைத்தன்மையுடன் இயங்குபவர், சமயங்களுக்கேற்ப ஒருபோதும் அதிக அக்கறை, ஒருபோதும் முழு புறக்கணிப்பு போன்ற மாறுபட்ட நடத்தைகளைக் காட்ட மாட்டார். எப்போதும் சொன்ன சொல் மாறாமல் சொல்வது, செய்வது ஒன்றாகவே இருக்கும்.
6. பெண்களின் செயல்களை ஆதரித்து, அதற்கு துணையாவார். பெண்ணின் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பார். வெற்றிகளைக் கொண்டாடுவார், எதிர்வரும் சிரமங்களில் துணையாக இருப்பார்.
7. கருணை மற்றும் மனித நேயத்துடன் வாழ்பவர். மனிதர்களை, விலங்குகளை, இயற்கையை கவனிப்பவர். குறிப்பாக, பிறரின் வலி, மகிழ்ச்சி ஆகியவற்றை உணரக்கூடியவராக இருப்பது.
8. சட்டென வரும் கோபத்தை கட்டுப்படுத்தக்கூடியவர், சில தவறுகளில் கோபம் வந்தாலும் அடக்கமாக நடத்துவார். குறிப்பாக, வன்முறை, துன்புறுத்தல், இழிவாகப் பேசுதல் ஆகியவை ஒருபோதும் இருக்காது.
9. பிரித்துப் பார்க்காத ஒற்றுமை உணர்வு கொண்டவர். ‘நான், நீயை விட, ‘நாம்’ என்பதில் கவனமாக இருப்பவர். சமமான அந்தஸ்தை தந்து எதிர்காலத்திற்கான திட்டங்களில் சேர்ப்பார்.
10. சுய அறிவுடன் திகழ்பவர், தன்னுடைய பலவீனங்கள், பலங்களை அறிந்திருப்பார். மேம்பட முயற்சி செய்வார். அதற்கேற்ப வாழும் இலக்குக் கொண்டிருப்பார். இந்த இடத்தில் பெண் என்பவர் மனைவியாக, காதலியாக அல்லது சகோதரியாக என எப்படி வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளுங்கள்.
இறுதியாக, ஒரு நல்ல ஆண் என்பதற்கு பெண்கள் விரும்பும் வகையில் அனைத்திலும் பரிபூரணமானவர் என பொருள் அல்ல. ஆனால் முயற்சி, மரியாதை, நேர்மை இந்த மூன்றும் இருப்பவர்கள் நிச்சயமாக நல்ல ஆணாகத்தான் இருப்பார்கள்.