

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமைக்குரிய சுதந்திர போராட்ட வீரர்!
சுதந்தர போராட்ட வீரரும் தமிழ் நவீன சிறுகதையின் தந்தை என்று போற்றப்பட்டவருமான வ.வே.சுப்பிரமணிய ஐயர் (வ.வே.சு.ஐயர்) ஏப்ரல் 2 ம் தேதி 1881 ம் ஆண்டு கரூர் அருகே உள்ள வரகநேரி கிராமத்தில் பிறந்தார். வெங்கேட ஐயருக்கு மகனான பிறந்ததால் தன் பெயரை வ.வே.சு.ஐயர் என சுருக்கமாக வைத்துக் கொண்டார்.
தனது 14 வயதில் மெட்ரிக்குலேசன் தேர்வில் மாநிலத்தில் 5 வதாக வந்து சாதித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ.பட்டம் பெற்றார். அதில் மாகாணத்தில் முதல் மாணவராகத் தேறினார். தனது பி.ஏ படிப்பில் சிறப்பு பாடமாக லத்தின் மொழியை தேர்வு செய்து படித்தார். அதிலும் மாநிலத்தில் முதல் மாணவராக வந்தார். தனது 15 வயதில் 11 வயது பாக்கியலட்சுமி எனும் பெண்ணை மணந்தார். அவருக்கு ஒரே மகன் அவர் தான் பின்னாளில் டாக்டராக பணியாற்றிய டாக்டர் V.V.S கிருஷ்ண மூர்த்தி. பின்னாளில் இதன் காரணமாக குழந்தைகள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
பின்னர் சென்னைக்குச் சென்று சட்டம் படித்து சென்னை மாநகர் ஜில்லா கோர்ட்டில் முதல் வகுப்பு ப்ளீடராக சேர்ந்து வக்கீல் தொழில் புரிந்தார். கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக1907-ல் லண்டன் சென்றார். அங்கே இந்தியா ஹவுசில் தங்கியிருந்த சமயத்தில் வீர சாவர்க்கர் உள்ளிட்ட சுதந்தர புரட்சி வீரர்களின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் ரகசியமாக நடத்தி வந்த 'அபிநவ பாரத்' சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். லண்டனில் பாரீஸ்டர் படிப்பை முடித்து பட்டம் பெறும் போது 'பிரிட்டிஷ் ராஜவிசுவாசியாக இருப்பேன்' என சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்ள மறுத்தால் பாரீஸ்டர் பட்டம் பெறவில்லை.
அடிப்படையில் திடகாத்திரமான உடல் அமைப்பு கொண்டவர் வ.வே.சு.ஐயர், அதிலும் தவறாமல் ஜிம் பயிற்சி செய்பவர். தினமும் கர்லக்கட்டை சுற்றி வருவார். சிறந்த நீச்சல் வீரர். அதோடு, ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகள் பெற்றார் மற்றும் பல இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்தார்.
இதனால் இவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. சீக்கியர் போல மாறு வேடம் பூண்டு, பிரிட்டிஷ் உளவாளிகளை ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாக 1910-ல் புதுச்சேரி வந்து சேர்ந்தார் அங்கு 1920 வரை இருக்கும் போது தான். அரவிந்த கோஷ், பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி ஆகியோருடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். 1919-ல் மகாத்மா காந்தியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரால்' தீவிரவாத தியாகி 'என்று கண்டறியப்பட்டார்.
காந்திஜியால் கவரப்பட்ட ஐயர், அகிம்சாவாதியாக மாறினார். காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து அகிம்சா வழியில் சுதந்தரத்துக்காகப் போராடினார்.
தேசபக்தன் இதழின் ஆசிரியராக சிலகாலம் பணியாற்றினார். சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை கற்று தமிழ் மொழி செழிப்பதற்குப் பெரும் பங்காற்றினார். மெளரிய வம்ச வரலாற்றை முதல் முறையாக புத்தக வடிவில் கொண்டு வந்தவர் வ.வே.சு ஐயர் தான். அதன் பின்னர் சந்திர குப்தர் வரலாற்றை எழுதினார். சீக்கிய மதகுரு குரு கோவிந்த் சிங் வரலாற்றையும் எழுதியுள்ளார்.
1857 ம் ஆண்டு வீர் சாவர்க்கர் எழுதிய 'தி இந்தியன் வார் ஆப் இன்டிபண்டன்ஸ்' புத்தகமாக வெளிவர உதவியவர் வ.வே.சு.ஐயர் தான். 1921-ல் பெல்லாரி சிறையில் இருந்தபோது ‘கம்பராமாயணம் - எ ஸ்டடி’ என்ற ஆங்கில நூலை எழுதினார். ஆங்கிலத்தில் திறனாய்வுக் கட்டுரைகள் பல எழுதினார்.
1922-ல் சேரன்மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். இங்கு நன்னெறி, அறிவியல், கலை, இலக்கியம் ஆகிய வற்றுடன் உடல் வலிவூட்டும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 'குளத்தங்கரை ஆலமரம்' என்ற சிறுகதையை வெளியிட் டார். இதுவே முதன் முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதை. இவரது 'மங்கையர்க்கரசியின் காதல்' என்ற புத்தகம்தான் தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை தொகுப்பு. கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகம் தொடங்கி புத்தகங்களை வெளியிட்டார். மாஜினியின் வாழ்க்கை வரலாறு, சீர்திருத்தவாதி புக்கர் டி வாஷிங்டன், பிரெஞ்சு மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.
வ.வே.சு.ஐயர் தொடங்கிய திருநெல்வேலி பாபநாசத்தில் அருவி கரையில் உள்ள பரத்வாஜ ஆஸ்ரமத்தில் 1925 ம் ஆண்டு இளம் துறவியாக இருந்த சுவாமி சித்பவானந்தா விரதம் இருந்தார். அவருக்கு உதவியாக சென்றார் வ.வே.சு.ஐயர் அப்போது அவருடன் சென்ற அவரது தங்கை பாபநாசம் அருவி சூழலில் சிக்கிக் கொண்டார். தனது தங்கையை காப்பாற்றப் போய் பாபநாசம் ஏரியில் விழுந்து ஏற்ப்பட்ட ஒரு விபத்தில் வ.வே.சு.ஐயர், 1925-ஆம் ஆண்டு ஜூன் 4 ம் தேதி தனது, 44-வது வயதில் காலமானார்.