

ஒரு மாணவனுக்கு எட்டு வகையான குணங்கள் தேவை:
உரக்க சிரிக்கக் கூடாது.
புலனடக்கம் கொள்ளல் வேண்டும்.
யாருடைய ரகசியத்தையும் வெளிப்படுத்த கூடாது.
அசுத்தமாக இருக்கக் கூடாது.
கெட்ட நடத்தை கூடாது.
சாப்பாட்டில் அதிக ஆசை கொள்ளக் கூடாது.
கோபம் காட்டக் கூடாது.
உண்மையில் பற்றுதல் இருக்க வேண்டும்.
இத்தகைய பண்புகள் ஒரு மாணவனிடம் இருந்து விட்டால் அவன் கல்வியறிவில் சிறந்த விளங்குவான்.
போதும் என்ற மனம் உடையவர்களால் தான் தானும் நிறைவோடு வாழ்ந்து, பிறர் வாழ்வும் உதவி செய்ய முடியும். மனதில் நல்ல நம்பிக்கை இல்லாவிட்டால் நல்லறிவு உண்டாகாது. நல்லறிவு உண்டாகவிட்டால் நல்லொழுக்கம் ஒருவருக்கு வாய்ப்பதில்லை.
பிறரை துன்புறுத்துவது, வதைப்பது ஆகிய செயல்கள் மிகப்பெரிய பாவம். அது, தீராத தீமையான கொடுமைகளுக்கு உன்னை இரையாக்கிவிடும். மகாபாதகம், கொல்லாமை, தீங்கு செய்யாமை ஆகிய செயல்கள் தான் நன்னெறிகளுக்கு வழி காட்டியாக இருந்து எல்லா சவுபாக்கியங்களையும் அளிக்கக் கூடியது.
உழைப்பும் ஊதியமும்!
வாய்மையைத் தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டவன் எவ்வளவு துன்பங்கள், துயரங்கள் தன்னை சூழ்ந்த போதிலும் கலக்கம் கொள்வதில்லை.
உண்மை உழைப்பில் கிடைக்கும் ஊதியத்திற்கு நிகரானது எதுவுமில்லை. விவேகம் என்னும் நல்லறிவுக்கு ஈடான குணம் இல்லை. மனிதன் போலி கவுரவத்திற்காக வேண்டாத ஆசைகளை வளர்த்துக் கொண்டு அல்லல்படுகிறான்.
பணத்தை அமிர்தம் என்று நினைத்து தேட முற்படுவார்கள் பாவச் செயல் மூலம் அதைப் பெறுகிறார்கள். இத்தேடலே அவர்களை மரண வாசலுக்கு அழைத்துச் சென்று விடும்.
எல்லா உயிர்களும் நம் உயிரே!
எல்லா உயிர்களையும் தன்னுயிராக நேசிக்க பழகுங்கள். கொல்லாமை என்னும் நெறி பல வகையான சுகங்களையும் அளிக்க வல்லது. அச்சத்திலிருந்தும் பகையுணர்விலிருந்தும் விடுபட்டவன் எந்த உயிருக்கும் துன்பம் தர விரும்ப மாட்டான்.
பிறருக்கு கொடுக்காமல் எந்தப் பொருளையும் உண்ணாதீர்கள். ஒருவருடைய அனுமதி இல்லாமல் அவருக்குரியதை எடுப்பதும் கூடாது.
எந்தப் பேச்சானது கடினமானதோ, மற்றவர்களுக்கு துன்பம் தருவதோ அப் பேச்சைத் தவிர்ப்பதே நல்லவர்களின் குணமாகும்.
மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும். அலைகின்ற மனதில் ஆசைகள் தோன்றும். ஆசைகள் தோன்றும் போது மிகவும் அற்பமான செயல்களைச் செய்ய தூண்டப் பெறுவோம்.
சந்தேக மனப்பான்மை கொண்ட மனிதன் எப்போதும் உயர்வு நிலையை பெறுவதில்லை. கோபம், பொறாமை, நன்றியின்மை, வீண் பிடிவாதம் ஆகிய குணங்களில் ஒரு குணம் நம்மிடம் இருந்தாலும் நற்குணங்கள் அனைத்தும் அழிந்துவிடும்.
நீங்கள் இல்லறத்தில் இருந்தாலும் சரி, துறவறத்தில் இருந்தாலும் சரி ஒழுக்கமில்லாவிட்டால் ஒரு பயனும் இல்லை. நற்கதியை அடைய ஒழுக்கமே ஆதாரமாக திகழ்கிறது.
அறவழியில் நடப்பவரைக் கண்டால் அங்கேயே அவரை வணங்குங்கள். நோயாளிக்குச் சேவை செய்வதில் ஆர்வம் கொள்ளுங்கள். பிறரின் நலனுக்காகவும், சுகத்திற்காகவும் பாடுபடுபவன் இறுதியில் தனக்குத் தானே சுகத்தைத் தேடிக் கொண்டவனாவான்.
மனம் விரும்பியதை அடையாவிட்டால் தளர்ந்து போய் விடுதல் கூடாது. வேண்டாத ஆசைகளை மனதில் இருந்து அகற்றி விடுங்கள். பாவங்களை மனப்பூர்வமாக ஒப்புக் கொள்வதில் தயங்குதல் கூடாது.
ஆறு வகையான பேச்சுக்களைப் பேசக் கூடாது. பொய், கடினத்தன்மை, யோசிக்காத தன்மை, எரிச்சல், திரித்துக்கூறல், சண்டையைத் தூண்டுவது ஆகிய ஆறு வகையான குற்றங்களைக் களைந்து நாம் பேச வேண்டும். இனிமையாக பேச நாம் பழகிக் கொள்ள வேண்டும்.