மிக்கி மவுஸ் என்று காந்தியால் செல்லமாக அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா?

மிக்கி மவுஸ் என்று காந்தியால் செல்லமாக  அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா?

விஞர், பேச்சாளர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை என பன்முகத்தன்மை கொண்ட, Nightingale of India என்றும் கவிக்குயில் என்றும் புகழாரம் சூட்டப்பட்ட சரோஜினி நாயுடுவின் நினைவு நாள் இன்று (02-03-2023).

     ஆங்கிலேயரிடம் சிறைபட்ட இந்தியாவின் விடுதலை வேண்டி பாடுபட்ட எத்தனையோ திறமைசாலிகளை அறிவோம் .அவர்களுள் பெண்கள் வரிசையில் தவிர்க்கவே முடியாத பெண் ஆளுமைதான் சரோஜினி நாயுடு. இவரின் பெருமைகள் ஒவ்வொன்றும் மதிப்பு மிகுந்தவை. அதில் குறிப்பிடத்தக்க விஷயங்களை இங்கு காண்போம் .

     ஆந்திராவில் (தற்போது தெலுங்கானா) உள்ள ஹைதராபாத் நகரத்தில் 1879 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 இல் இவர் பிறந்தார். தந்தை பெயர் அகோரநாத்.
தாயார் வரதாசுந்தரி. பெண்களை முடக்கி வைத்த அந்தக்காலத்தில்  முற்போக்குவாதிகளான இவரது பெற்றோர் கல்வி கற்க இவரை ஊக்குவித்தது சிறப்பு. தனது 12வது வயதில் சரோஜினி மெட்ரிகுலேஷன் தேர்வில்  சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் மாணவியாக தேர்வு பெற்றார். அந்தச் சிறுவயதிலேயே அபாரமான கவிதைகள் எழுதி அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தினார். இவருக்குப் பிடித்த கவிஞர் பெர்சி பைஷ் ஷெல்லி ஆவார். பின் உயர் கல்விக்காக இங்கிலாந்து சென்றவர் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் படித்தார். ஆங்கிலத்துடன்  தெலுங்கு, உருது, வங்காளம், பாரசீகம் போன்ற பல மொழிகளில் பேசவும் கற்றுக்கொண்டார்.

     இங்கிலாந்தில் இருந்து தாயகம் திரும்பிய அவர் தனது 19-வது வயதில் கோவிந்தராஜ் நாயுடு எனும் மருத்துவரைக் காதலித்து கலப்புத் திருமணம் செய்துகொண்டார். 1898 ஆம் ஆண்டு சென்னையில் அவர் திருமணம் நடந்தது. கலப்புத் திருமணங்களை அனுமதிக்காத அந்தக் காலத்திலேயே தனக்குப் பிடித்தவரைக் காதலித்து தந்தையின் சம்மதத்துடன் சாதீயக் கட்டுப்பாடுகளின் தீவிர எதிர்ப்புகளுக்கிடையில் திருமணமும் செய்துகொண்டது இவரின் புரட்சிகளில் ஒன்று.

       இவரே சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமைக்குரியவர். பெண் கல்வியை முன்னிறுத்தி சமையலறையில் அடிமைப் பட்டுக்கிடந்த பெண்கள் முன்னேற்றத்துக்கு துணிச்சலாக குரல் கொடுத்த சரோஜினி நாயுடுவின் பிறந்தநாள் இந்தியாவின் மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு அவருக்குப் பெருமை சேர்க்கிறது.

        1905ஆம் ஆண்டு வங்காளம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து சரோஜினி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது கோபாலகிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர், முஹமது அலி ஜின்னா, அன்னிபெசன்ட், நேரு ஆகியோரின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. மகாத்மா காந்தியுடன் தண்டி யாத்திரையில் ஈடுபட்டார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பெண் கொடுமையைக் கண்டித்தும், பெண்கள் முன்னேற்றம் மற்றும் இளைய சமுதாயத்தின் நல்வாழ்வு குறித்தும் சொற்பொழிவாற்றினார்.

     1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அத்துமீறல்களைக் கண்டித்து சரோஜினி நாயுடு ஆவேசமாக பேசியது அவர் மீதான கவனத்தை தந்தது. ஆங்கிலேய அரசு அளித்த பதக்கத்தைத் திருப்பி அனுப்பியதும் அவரது ஆவேச சொற்பொழிவும் மக்களிடம் எழுச்சியை உருவாக்கியது. அது ஆங்கிலேய அரசையும்  மிரளச் செய்தது. தொடர்ந்து லண்டனில் நடந்த கூட்டத்திலும் சரோஜினியின் கனல் பேச்சு  ஒலித்து ஆங்கிலேயருக்கு கிலி தந்தது. “குடிகளை கொடிய விலங்குகள் போல வேட்டையாடலாமா? ஒன்றும் அறியாத நிரபராதிகளையும்  நிராயுதபாணிகளையும் சுட்டு மருந்து தீரும் வரை சுட்டேன் என்று ஜெனரல் டயர் குண்டு மழை பொழிந்தானே அது நியாயமா? பிரிட்டிஷாரின் வீரம் இதுதானா? பிரிட்டிஷ்  ஜனநாயகம் இதுதானா?” என்று தீப்பொறி பறக்க  முழங்கினார். அப்போது கூடியிருந்த கூட்டம் “வெட்கம் வெட்கம்” என்று குரல் கொடுக்க ஆங்கிலேயர் அரசு செய்வதறியாது திகைத்தது.

1925 ஆம் ஆண்டு சரோஜினி நாயுடு காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை அரசாங்கத்தின் ரவுலட் சட்டத்தைக் கண்டித்து நடந்த ஒத்துழையாமை இயக்கத்திலும்  பங்கேற்றார். 1930ல் தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை கோரி நடந்த போராட்டத்தில் காந்தி கைது செய்யப்பட்டார். சில நாட்களில் சரோஜினி நாயுடுவும் கைதாகி பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அதெற்கெல்லாம் அவர் அஞ்சவில்லை. சிறைச்சாலையிலும் உற்சாகமாகவும் சுதந்திரமாகவும்  கவிதைகளை எழுதி குவித்தார். இயற்கையாகவே மலர்களின் மீது அதீத பிரியம் கொண்ட அவர், சிறை வளாகத்தில் ஏராளமான பூச்செடிகளை வளர்த்து அவை பூத்துக் குலுங்கும் காட்சியைக் கண்டு ரசித்தார். கவிதைகள் தீட்டியும் மலர்களை ரசித்தும் சிறைவாசத்தை இனிமையாக்கிக் கொண்டார். அவர் விடுதலை பெறப்போகும் நாளும் வந்தது. அப்போது  அவர் நட்டு வளர்த்த மேலும் பல செடிகள் பூக்கும் தருவாயில் இருந்தன. அவற்றை அப்படியே விட்டுச் செல்லாமல் அவை பூப்பதை காண விரும்பிய சரோஜினி விடுதலை நாளை தள்ளிப் போட அனுமதி கேட்டார். அனுமதியும் கிடைத்து. அவர் விரும்பியது போல்  பூக்கள் பூத்துக் குலுங்கும் காட்சியை கண்ட பிறகே அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்!

    1931-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியுடன் லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டார்.  1942 அக்டோபர் இரண்டாம் தேதி ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கைதாகி காந்தியுடன்   21  மாதங்கள் சிறையில் இருந்தார். காந்தி அவரைச் செல்லமாக ‘மிக்கி மவுஸ்’ என்று அழைத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு உத்தர பிரதேச மாநில கவர்னராக பதவி ஏற்று இந்தியாவின் முதல் பெண் கவர்னர் எனும் பெருமையும் பெற்றார்.

கவிக்குயில் என்று அழைக்கப்பட்ட சரோஜினி நாயுடுவின் பெரும் ஆர்வம் மற்றும் பங்களிப்பு சுதந்திரப் போராட்டத்துடன் கவிதைகளிலும் அதிகம் இருந்தது. இவரது கவிதைகள் அனைவராலும் புரிந்துகொள்ளும் அழகியல் வார்த்தைகளால் யதார்த்தத்துடன் புனையப்பட்டு எளிதாக பாடக் கூடியதாகவும் இருப்பது சிறப்பு. இவரின் கவிதைகளுக்காக பல பாராட்டுகளைப் பெற்றுள்ள இவரின் முதல் பாடல்கள் தொகுப்பு ‘தி கோல்டன் த்ரெஷோல்ட்’ எனும் பெயரில் 1905 ஆம் ஆண்டு வெளிடப்பட்டதுடன் தொடர்ந்து மேலும் இரண்டு பகுதிகள் வெளியிடப்பட்டது. 1912ல் ‘தி பேர்ட் ஆப் டைம்’ 1917ல் ‘தி புரோக்கன் விங்’  1918ல் ‘பீஸ்ட் ஆப் யூத்’ ஆகியவைகள் வெளியிடப்பட்டது. 1961ஆம் ஆண்டு அவரது மகளான பத்மஜா, தன் தாயின் வெளியிடப்படாத கவிதைகளை தி ஃபெதர் ஆஃப் டான் எனும் தலைப்பில் வெளி யிட்டுள்ளார். இவரது கவிதை படைப்புகள் தேசபக்தி, காதல், சோகம் உள்ளிட்ட கருப்பொருளை கொண்டவை. குழந்தைகளுக்கான கவிதைகளும் எழுதி இருக்கிறார்.

      இந்தியப் பெண்ணாக பிறந்து கல்வியில் முன்னேறி அரசியலிலும் தடம் பதித்து பெண் சுதந்திரத்தின் அடையாளமாகத் திகழ்ந்த சரோஜினி நாயுடு அவர்கள் 1949 ஆம் ஆண்டு மார்ச் இரண்டாம் தேதி லக்னோவில் உள்ள அரசு இல்லத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

   அவர் மறைந்த இந்த தினத்தில் அவரின் பெருமைகளை நினைவுகளை நம் பிள்ளைகளிடம் பகிர்ந்து பெருமிதம் கொள்வோம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com