

ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய குடும்ப தினம் உலகில் அமைதி மற்றும் ஒற்றுமை பற்றிய கருத்தை ஊக்குவிக்கும் வகையில் புத்தாண்டு பிறக்கும் ஜனவரி ஒன்றாம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
நம் குடும்பம், நம் நாடு என்று இல்லாமல் கூடுதலாக தேசியம் ,எல்லைகள் அல்லது இன வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் உலகத்தில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் என்ற கருத்தை எடுத்துக்காட்டி அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது உலகளாவிய குடும்ப தினம்.
1997இல் புத்தாண்டு முதல் நாளில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை உலக குழந்தைகளுக்கான அமைதி மற்றும் அகிம்சை கலாச்சாரத்திற்கான தினம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 1999ல் ஐநா சபையின் உறுப்பு நாடுகள் இணைந்து ஆண்டின் முதல் நாளை அமைதி நிலவும் திட்டங்களை உருவாக்க அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டு உலக அமைதிக்கான திட்டங்களை வகுத்தன.அன்றைய தினத்தின் நினைவாக 2001 ஆம் ஆண்டு முதல் உலகளாவிய குடும்ப தினத்தை ஆண்டுதோறும் பிரகடனப்படுத்தியது ஐநா சபை.
உலகளாவிய குடும்ப தினம் 2024 கருத்து இன்னும் வெளியிடப்படவில்லை ஆனால் ஒவ்வொரு வருடமும் உலகளாவிய குடும்பதினத்தை ஒட்டி ஒவ்வொரு கருத்தை முன் வைப்பது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு கருப்பொருள் ”உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் மற்றும் உயிரினங்களை நமது குடும்பங்களாக கருதி அவைகளிடம் அன்பு காட்டுவதன் மூலம் நமது ஒற்றுமையை நாம் வளர்க்க வேண்டும். மாறுபட்ட குணங்கள் கொண்டவர்கள் எனினும் ஒருவருக்கொருவர் அனுசரித்து சகிப்புத்தன்மையுடன் நடந்து உலகில் அமைதியை நிலை நாட்ட முன் வர வேண்டும்.
குடும்ப அமைப்பு என்பது தற்போது சிதைந்து வருகிறது. கல்வி, பணிவாய்ப்பு மற்றும் இணையதளங்களின் வருகையால் வீட்டுக்குள்ளேயே குடும்பங்கள் சிதறி இருப்பதை தற்போது காண முடிகிறது. இதை தவிர்க்கும் விதமாக சில உறுதிமொழிகளை நாம் எடுக்க வேண்டும் . அலுவலகம் என்பது வேறு குடும்பம் என்பது வேறு என்பதை நினைவில் கொண்டு அலுவலகப் பணிகளை வீட்டில் செய்யாமல் குடும்பத்திற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும்.
முதலில் நம் குடும்பத்தை ஒற்றுமையாக்கி அமைதியுடன் வாழப் பழக வேண்டும். குடும்பத்தில் அமைதி நிலவினால் மட்டுமே நம்மால் சமூகத்தில் அமைதியான மனிதராக வலம் வந்து மாற்றத்தை உருவாக்க முடியும். நம் மூலம் மற்றவரும் அமைதியை அடைய முடியும் இதை கருத்தில் கொண்டு உலகளாவிய இந்த குடும்ப தினத்தில் உலகமுழுவதும் ஒரே குடும்பமாக எண்ணி நாமும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்வித்து உலகத்தில் அமைதியும் சமாதானமும் நிலவ பாடுபடுவோம்.