

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய பெண் குழந்தைகள் நாளின் கருப்பொருள்: பெண்களின் நோய்த் தடுப்பு பராமரிப்பு, மனநல ஆதரவு மற்றும் தரமான சுகாதார சேவைகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்தல்!
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 ஆம் நாளன்று, தேசிய பெண் குழந்தை நாள்(National Girl Child Day) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியச் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சமத்துவமின்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால், 2008 ஆம் ஆண்டு இந்நாள் தொடங்கப்பட்டது.
பெண் சிசுக்கொலை, குழந்தைத் திருமணம், வரையறுக்கப்பட்ட சுகாதார அணுகல் மற்றும் கல்வித் தடைகள் உள்ளிட்ட சவால்களைச் சமாளிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், பெண் குழந்தைகளின் சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் சமூக வாய்ப்புகளில் பாலின அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் குறித்த விழிப்புணர்வைப் பிரதிபலிக்கிறது.
ஒவ்வொரு பெண்ணும் ஆரோக்கியமாகவும், படித்தவராகவும், பாதுகாப்பாகவும் வளர்வதை உறுதி செய்வதற்காக குடும்பங்கள் மற்றும் சமூகங்களை ஊக்குவிக்கும் ‘பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் கல்வி’ போன்ற அரசாங்க முயற்சிகளை இந்த நாள் வலுப்படுத்துகிறது. தேசிய பெண் குழந்தைகள் நாளின் கருப்பொருள் ஒவ்வொரு ஆண்டும், பெண்களுக்கான சம வாய்ப்புகள், சுகாதாரம் மற்றும் கல்வியை தொடர்ந்து வலியுறுத்துகிறது.
குறிப்பாக, பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களுக்கு சுகாதாரமே முதன்மைத் தேவையாக இருக்கிறது. வளர்ச்சித் தாமதங்கள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், தொற்றுகள் மற்றும் வளர்ந்து வரும் நாட்பட்ட நோய்கள் ஆகியவை கடுமையான பிரச்னைகளாக மாறுவதற்கு முன்பே கண்டறிய தடுப்புச் சுகாதாரப் பரிசோதனை உதவுகிறது. தொடக்கக் காலத்தில், சரியான நேரத்தில் இதனை அடையாளம் கண்டால், அதனைத் தடுத்து, அதனால் வரும் விளைவுகளைத் தவிர்த்து, பெண் குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தைக் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்த முடியும்.
வளர்ச்சி அளவுருக்கள், பார்வை, செவிப்புலன், இரத்த சோகை மற்றும் பிற நிலைமைகளுக்கான வழக்கமான பரிசோதனை, சுகாதார வழங்குநர்கள் வளர்ச்சியைக் கண்காணிக்கவும், ஏதேனும் குறைகள் இருப்பின், அவற்றை உடனடியாக அடையாளம் காணவும் உதவுகிறது. தடுப்புப் பராமரிப்பில் தடுப்பூசி, பல் பரிசோதனை, மனநலப் பரிசோதனை மற்றும் சிறுமிகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் குறித்த ஆலோசனை போன்றவைகளும் இடம் பெறுகின்றன.
இந்த விரிவான அணுகுமுறைகளால், பெண்கள் தங்கள் முழு உடல், அறிவாற்றல் மற்றும் உணர்ச்சித் திறனை அடைய உதவுவதோடு, வாழ்நாள் முழுவதும் அவர்களுக்குப் பயனளிக்கும் ஆரோக்கியமான பழக்கங்களையும் ஏற்படுத்துகின்றன.
இதனை அடிப்படையாகக் கொண்டு, வாழ்க்கை முறையின் வெவ்வேறு கட்டங்களில் சுகாதாரத் தேவைகள் குறிப்பிடத்தக்க அளவில் மாறுகின்றன. இதனால் பெண்களின் வயதுக்கேற்ப பரிசோதனைகளும் தேவையாக இருக்கின்றன.
பெண் குழந்தைப் பருவத்தின் தொடக்கக் காலத்தில் (0 -12 வயது), வளர்ச்சிக் கண்காணிப்பு, வளர்ச்சிக்கான மைல்கற்கள், நோய்த்தடுப்பு மற்றும் பிறவிக் கோளாறுகளுக்கான பரிசோதனை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
இளம் பருவத்தில் (13-19 வயது), இரத்த சோகை, ஊட்டச்சத்து நிலை, மாதவிடாய்க் கோளாறுகள், தைராய்டு செயல்பாடு மற்றும் பெண்களின் மன நலம் ஆகியவற்றிற்கான சோதனைகள் இடம் பெறுகின்றன. இந்த முக்கியமானக் காலகட்டத்தில் இனப்பெருக்கச் சுகாதாரக் கல்வி மற்றும் பரிசோதனைக்குக் குறிப்பிட்ட கவனம் தேவையாக இருக்கிறது.
வயது வந்த காலத்தில் (20+ வயது), பெண்களுக்கு இரத்த அழுத்தம், இரத்தக் குளுக்கோஸ், லிப்பிடுகள், கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்ப் பரிசோதனை, மார்பக நலம் மற்றும் எலும்பு அடர்த்தி ஆகியவற்றிற்கான வழக்கமான மதிப்பீடுகள் தேவையாக இருக்கும்.
இப்படி பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களின் வாழ்க்கை நிலைகளுடன் பரிசோதனைத் திட்டங்களைச் சீரமைப்பது ஒவ்வொரு கட்டத்திலும் ஆரோக்கியமான வளர்ச்சியை ஆதரிக்கிறது. அதே வேளையில் நோய் அதிகரிப்பதைத் தடுக்கவும் செய்கிறது.
2026 ஆம் ஆண்டுக்கான தேசிய பெண் குழந்தைகள் நாளின் கருப்பொருள், பெண்களின் நோய்த் தடுப்பு பராமரிப்பு, மனநல ஆதரவு மற்றும் தரமான சுகாதார சேவைகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்தல் ஆகியவற்றையே வலியுறுத்துகிறது.
எனவே இந்நாளில், பெண்களுக்கான ஊட்டச்சத்து ஆரோக்கியமான வளர்ச்சியின் ஒரு மூலக்கல்லாக உள்ளது, உணவுத்தரம், நுண்ணூட்டச்சத்து, கூடுதல் ஊட்டச்சத்து, சமச்சீர் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றிய கல்வி ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. இளைஞர்களிடையே அதிகரித்து வரும் பதட்டம் மற்றும் மனச்சோர்வு விகிதங்களைக் கருத்தில் கொண்டு, பெண்களின் மன நலத்திலும் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது.
ஒவ்வொரு பெண்ணும் தனது முழுத்திறனை அடையத் தேவையான பரிசோதனைகள் மற்றும் கவனிப்பைப் பெறுவதை உறுதி செய்ய சுகாதார வழங்குநர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை இந்நாளில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.