உ. சகாயம் IAS அவர்களுக்கும் 'வேட்டி நாள்' கொண்டாடுவதற்கும் என்ன தொடர்பு?

ஜனவரி 6: வேட்டி நாள்!
Dhoti Day
Dhoti Day
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

தமிழ்நாட்டிலுள்ள அரசு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி உ. சகாயம், இளைஞர்களிடம் வேட்டி அணியும் வழக்கத்தை ஏற்படுத்தும் எண்ணத்துடன் பொங்கலை ஒட்டி 'வேட்டி நாள்' (Dhoti Day) கொண்டாடுவோம் என்கிற ஆலோசனையை வெளியிட்டார். அவரது அரசுப் பணிகளின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் பலர், அவர் குறிப்பிட்ட ஜனவரி 6 ஆம் நாளில் வேட்டி அணிந்து கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி 6 ஆம் நாளில் வேட்டி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆண்கள் வேட்டி அணியும் வழக்கம் இருந்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் அனைவரும் அணியும் ஒரு சாதாரண உடையாக வேட்டி இருந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி இலங்கை, வங்காள தேசம் மற்றும் மாலத் தீவுகளிலும் வேட்டி பயன்பாட்டில் உள்ளது. முக்கிய விழாக்களின் போது, பாரம்பரிய உடையான வேட்டியை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

வேட்டிகளின் அளவை வைத்தும், அதனுடைய வகையை நிர்ணயம் செய்வது உண்டு. நான்கு முழ வேட்டி, எட்டு முழ வேட்டி அல்லது இரட்டை வேட்டி, கரை வேட்டி என்று வேட்டியை வகைப்படுத்துகின்றனர். எட்டு முழ வேட்டியை அந்தணர்கள் போன்ற சிலர் ஐந்து கச்சம் வைத்து உடுத்திக் கொள்கின்றனர். இதனை ‘பஞ்சக்கச்சம்’ என்கின்றனர். அரசியலாளர்கள் தாங்கள் சார்ந்த கட்சிக் கொடிகளில் இடம்பெற்றிருக்கும் வண்ணங்களைக் கரையாகக் கொண்ட வேட்டிகளை அணிகின்றனர். தற்போது இளைஞர்களிடம் வேட்டியின் கரைகளின் நிறத்தில் சட்டையை அணிந்து கொள்ளும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

தற்போதையக் காலத்தில் பருத்தி, பட்டு உள்ளிட்ட சில நூல்களால் தயாரிக்கப்படும் வேட்டிகள் பயன்பாட்டிலிருந்து வருகின்றன. பெரும்பாலும் தூய வெண்ணிறத்திலேயே வேட்டி இருக்கும், தற்போது வேட்டியானது நீலம், கருப்பு, சிவப்பு அல்லது காவி நிறங்களிலும் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
வேட்டி - பற்றிய அற்புதத் தகவல்கள்!
Dhoti Day

வெளுப்பான் கொண்டு வெளிறச் செய்யாது வெளிர் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் வேட்டிகள் கோடி வேட்டி அல்லது புதிய வேட்டி என்கின்றனர். இந்த வேட்டியினைத் திருமணம் போன்ற விழாக்களில் உடுத்திக் கொள்கின்றனர்.

பட்டு நூலால் நெசவு செய்யப்பெற்ற வேட்டிகளும் கிடைக்கின்றன. பட்டு வேட்டிகளின் விலை அதிகமென்பதால், முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை வேட்டி தவிர்த்த நீலம், கருப்பு, சிவப்பு அல்லது காவி நிறங்களிலான வேட்டிகள் இந்து சமய விரதங்களின் போதும், கோயிலுக்குச் செல்லும் போது அணிந்து கொள்கின்றனர்.

பண்டையக் காலத்தில் வாழ்ந்த அரசர்களும் புலவர்களும் தங்களுடைய வேட்டிகளில் தங்கத்திலான சரிகைகள் வைத்து அணிந்திருக்கின்றனர். வேட்டி அணிந்து கொள்ளும் வழக்கம் தற்போது பெருமளவில் குறைந்து போய்விட்டது. கோயில் பணிகளில் ஈடுபடுபவர்கள், அரசியலாளர்கள் மற்றும் தமிழ்ப் பண்பாட்டு ஆர்வலர்கள் போன்றோர் நாள்தோறும் வேட்டி அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் தங்கள் வீட்டில் நடைபெறும் மரபு வழியிலான விழாவின் போது மட்டும் வேட்டி அணிகின்றனர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வேட்டி அணிவது இழிவானது போன்று கருதும் நிலை ஏற்பட்டது. தமிழரின் மரபுவழி உடையான வேட்டியை அணிந்து செல்பவர்கள், சில மன்றங்களில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு, தமிழ்நாடு அரசு ‘வேட்டி கட்டிக் கொண்டு வருபவர்களை அனுமதி மறுக்கும் மன்றங்களின் உரிமம் உடனடியாகப் பறிக்கப்படும்’ என்று சட்டம் கொண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து, வேட்டி அணியும் பண்பாடு இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
8 வகையான இந்திய வேட்டிகள் பற்றி தெரிந்து கொள்வோம்!
Dhoti Day

இன்றைய வேட்டி நாளில் வேட்டியைக் கட்டி மகிழ்வதுடன், வேட்டி உற்பத்தி செய்யும் நெசவாளர்களின் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்குவது அனைவரது கடமையாகும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

logo
Kalki Online
kalkionline.com