இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் மைசூர் அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகாசன விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்நிலையில் அங்கு கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, உள்ளிட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த யோகா விழாவில் பங்கேற்று யோகாசனங்களை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
யோகா என்பது ஒரு தனிப்பட்ட நபருக்கானது அல்ல.. அது ஒட்டுமொத்த மனித குலத்திற்குமானது. எனவேதான் இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்திற்கான கருப்பொருள் 'மனிதகுலத்திற்கான யோகா' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் நமது உடல் மற்றும் ஆன்மாவிலிருந்துதான் தொடங்குகிறது. அந்த வகையில் நம்மை விழிப்புணர்வாக வைத்திருக்க உதவுவது யோகா ஆகும். யோகா தனிநபருக்குள் அமைதியை கொண்டு வரும் பட்சத்தில், அந்த அமைதி நாட்டுக்கும் உலகிற்கும் நன்மைகள் செய்யும்.
நாம் எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்தாலும் சில நிமிடங்கள் தியானம் செய்தால் அது நம்மை ரிலாக்ஸ் ஆக்கி, நமது செயல்திறனை அதிகரிக்கச் செய்யும். எனவேதான் யோகா தற்போது வாழ்க்கை முறையாக மாறிவிட்டது. உலகிற்கான இந்தியாவின் கொடை யோகா.. அதனால்தான் யோகா தினமானது உலகத் திருவிழாவாக மாறிவிட்டது.
-இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாடு சுதந்திரம் அடைந்து 75ம் ஆண்டை கொண்டாடும் வகையில், நாட்டின் 75 முக்கிய இடங்களில் யோகா தின கொண்டாட்டத்திற்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சி காரணமாக ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா அறிவித்தது. அந்த வகையில் 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது.