செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவந்த சென்னை ஃபோர்டு கார் தயாரிப்பு நிறுவனம், கடந்த 10 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, இம்மாதம் 31-ம் தேதியுடன் நிரந்தரமாக மூடப்போவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அங்கு தயாரான கடைசி காருக்கு அந்நிறுவன ஊழியகர்கள் கண்கலங்கி பிரியாவிடை கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பான ஃபோர்டு, நிறுவனம் இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய கிளை மூலம் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை மறைமலை நகர் தொழிற்சாலை இம்மாதம் 31-ம் தேதியுடன் நிரந்தரமாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சென்னை மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் ஃபோர்டு கார் உற்பத்தி இன்றுடன் முடிவடைந்தது. தனது கடைசி மாடல் காரான ECO-ஸ்போர்ட்ஸ் காரை செய்து முடித்தது சென்னை தொழிற்சாலை. தனது கடைசி காரை தயாரித்து முடித்த ஃபோர்டு நிறுவனத்தின் காரை ஊழியர்கள் அலங்கரித்து கண்ணீர் மல்க தொழிற்சாலைக்கு விடை கொடுத்தனர்.
பல ஆயிரக்கணக்கான கார்களை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஏற்றுமதி செய்த இந்த தொழிற்சாலை இம்மாதம் 31-ம் தேதியுடன் நிரந்தரமாக மூடப்படுவதையடுத்து அந்நிறுவன ஊழியர்கள் சோகத்துடன் விடைகொடுத்தனர்.