இந்தியாவின் தேசிய மொழி இந்தி; நடிகர் அஜய் தேவ்கன் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

இந்தியாவின் தேசிய மொழி இந்தி; நடிகர் அஜய் தேவ்கன் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!
Updated on

இந்தியாவின் தேசிய மொழி இந்தி என தவறான தகவலை பதிவு செய்த நடிகர் அஜய் தேவ்கனுக்கு சமூக வலைதளங்கலில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கன்னட நடிகர் சுதீப் நேற்று ஒரு திரைப்பட விழாவில் பங்கேற்றபோது, அவரிடம் கேஜிஎஃப் -2 படம் பற்றி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பான் இந்தியா படங்கள் உருவாகிவிட்டன. எனவே இந்தி இனி தேசிய மொழியாக இருக்க முடியாது என தெரிவித்தார்.

நடிகர் சுதீப்பின் இந்த கருத்துக்கு  பதிலடி கொடுக்கும் விதமாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தன் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் தெரிவித்ததாவது:

இந்தி நமது தேசிய மொழி இல்லை என்றால், உங்கள் தாய்மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? இந்தி தான் நமது தேசிய மொழியாக இருந்தது; இருக்கிறது; இனிமேலும் இருக்கும்"

-இவ்வாறு அஜய் தேவகன் பதிவிட்டார். இதையடுத்து அஜய் தேவ்கனுக்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் தேசிய மொழி என ஒன்று கிடையாது. ஆட்சி மொழிகளாக பட்டியலிடப்பட்டிருக்கும் 22 மொழிகளில் ஒன்றுதான் இந்தி. தவறான தகவலை பதிவு செய்ததற்காக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்  என பல நெட்டீசன்கள் ட்வீட் செய்துள்ளனர்.

ஒரு மொழியில் பிற மொழி படங்கள் டப் செய்யப்படுவதால் அது தேசிய மொழியாக மாறிவிடுமா? உங்கள் பொது அறிவு அபாரம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com