![Eye Donation...](http://media.assettype.com/kalkionline%2F2024-06%2F354a41fd-0061-4a46-bdcd-2ee967ae3733%2FUntitled_design__13_.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
உடல் உறுப்பு தானம் செய்வது என்பது ஒரு உன்னதமான செயல். இதை செய்வதன் மூலம் பலருக்கு உயிரையே கொடுக்கலாம். சிறுகுடல், சிறுநீரகம், கண்கள், கல்லீரல், இதயம் மற்றும் சரும திசுக்கள் போன்ற உறுப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிறரது உடல் உறுப்புக்களை பொருத்த முடியும் என்பது நாம் அறிந்த ஒன்று.
தானத்தில் சிறந்த கண் தானம் செய்வதின் மூலம் நாம் இறந்த பின்பும் மற்றொருவர் மூலம் இவ்வுலகைப் பார்க்கலாம். கண் மாற்று அறுவை சிகிச்சை பார்வையற்ற ஒருவருக்கு உலகைப் பார்க்க உதவும். ஒருவர் இறந்த பிறகே கண் தானம் பெறப் படுகிறது. வயது வித்தியாசமின்றி எந்த வயதிலும் கண் தானம் செய்யலாம். கார்னியல் மாற்று அறுவை சிகிச்சையில் நோயாளியின் நோயுற்ற கார்னியாவை (கண் வெளிப்புற பகுதி ) அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, அதற்குப் பதிலாக தானமாக பெறப்பட்ட கார்னியல் திசு பொருத்தப்படும் .
சமீபத்தில் நெருங்கிய உறவினர் ஒருவரின் கார்னியா அறுவை சிகிச்சையின்போது கண்தானம் செய்வதின் முக்கியத்துவத்தை எங்களால் உணர முடிந்தது. அவர் கணவரின் உடல் நிலை சரியில்லாததால் உறவினர் தான் கணவரை முழுமையாக கவனித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கும் பார்வைக் கோளாறு ஏற்பட்டு இரண்டு கண்களிலும் கேடராக்ட் அறுவை சிகிச்சை மேற் கொள்ள வேண்டி வந்தது. துரதிஷ்டவசமாக அறுவை சிகிச்சைக்குப் பின் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு கண்களிலும் முழுமையாகப் பார்வை போய் விட்டது.
அவர் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தன்னம்பிக்கை மிகுந்தவர். அப்படிப்பட்டவர் பார்வையை இழந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி கணவரையும் கவனித்துக் கொள்ள முடியாமல் அவர் பட்ட கஷ்டங்களை விவரிக்க வார்த்தைகள் இல்லை. மருத்துவர்கள் அவரின் கண்கள் மிகுந்த சேதமடைந்ததால் பார்வை திரும்ப வருவது சந்தேகமே என்றனர்..
அவரது மருத்துவர் கார்னியா அறுவை சிகிச்சை பலனளிக்கலாம் என்று ஒரு நிபுணரை பரிந்துரைத்தார். கண்களை பரிசோதித்த நிபுணர் ஒரு கண்ணில் கார்னியா அறுவை சிகிச்சை செய்யலாம் ஆனால் பார்வை முழுமையாக வருவதை உறுதியாக சொல்ல முடியாது என்றார். இரண்டு முறை கண் வங்கியிலிருந்து கார்னியா கிடைத்த போதிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை. மனம் தளராமல் காத்திருந்த அவருக்கு சமீபத்தில் வெற்றிகரமாக கார்னியா அறுவை சிகிச்சையால் கண் பார்வை திரும்பக் கிடைத்தது.
கருவிழி நோயினால் பார்வையிழந்த இருவருக்கு கண் தானம் செய்பவரால் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பார்வை தர முடியும். கண் தானம் செய்வதன் மூலம் ஒருவருக்கு வாழ்க்கையையே திரும்ப கொடுக்க முடியும் என்பது உன்னதமான ஒன்று.
உடல் உறுப்புதானத்தை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு இதனை ஊக்கப்படுத்தும் வகையில் உறுப்புதானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் அவர்களின் இறுதி சடங்கானது நடைபெறும் என்று அறிவித்து இருக்கின்றது. இது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம்
உறுப்பு தானம் பலருக்கு உயிர் கொடுக்கும் ஒப்பற்ற தானம்.