என் சுவாஸக் காற்றே - உலக காற்று தினம் (ஜூன் 15)!

World Wind Day
World Wind Day

- மரிய சாரா

காற்று - இயற்கையின் இன்றியமையாத சக்தி:

நம்மைச் சுற்றி எங்கும் இருக்கும் இயற்கையின் அற்புதமான சக்தி காற்று. அதனை நாம் கண்ணால் பார்க்கமுடியாது. ஆனால், அதன் தாக்கத்தை நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் உணரமுடியும். மரங்களை அசைப்பதுமுதல், கடல்களில் அலைகளை உருவாக்குவது வரை காற்று அனைத்திலும் உள்ளது. இது சுவாசத்திற்கு அவசியமான ஆக்ஸிஜனை நமக்கு வழங்குகிறது. மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது. புவி வெப்பமயமாதலைக் குறைக்கிறது.

உலக காற்று தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

விஞ்ஞான வளர்ச்சியில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய நமது பூமியின் எதிர்காலத்திற்கு காற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும், காற்று, மின்சாரம் போன்ற புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஆதாரங்களைப் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஆம் தேதி உலக காற்று நாள் (World Wind Day) கொண்டாடப்படுகிறது. இந்த நாள் காற்றின் பங்களிப்பைப் பற்றி சிந்திக்கவும், அதைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் நமக்கு ஒரு நினைவூட்டலாகும்.

உலக அளவில் காற்று தினம் 2007ஆம் ஆண்டு முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டு, உலக வானிலை அமைப்பும் (World Wind Energy Association) உலக காற்று எரிசக்தி கூட்டமைப்பும் (Global Wind Energy Council) இணைந்து நடத்துகின்றன. இந்த நாளில் காற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி பெரும்பான்மையான மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

காற்றின் நன்மைகள்:

  1. சுவாசிக்கக்கூடிய காற்று (O2) நாம் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமான ஒன்று. மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்ஸிஜனை வெளியேற்றுவதன் மூலம் சுத்தமான காற்றை வழங்குகின்றன.

  2. பழங்காலத்திலிருந்தே, கப்பல்கள் பயணம் செய்ய காற்று ஒரு இயற்கையான சக்தியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  3. காற்று மலர்களின் மகரந்தத்தை மற்ற மலர்களுக்குக் கொண்டு செல்ல உதவுகிறது. இது தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கு மிக அவசியமானது.

  4. வெப்பமான நாட்களில் காற்று நமக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது.

  5. காற்று மின்சாரம் என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஆதாரமாகும். காற்று சுழலிகள் காற்றின் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இது படிம எரிபொருட்கள் எரிப்பதைக் குறைத்து, காற்று மாசுபாட்டைக் குறைக்கிறது.

    தமிழ்நாட்டில் காற்று எரிசக்தி பயன்பாட்டின் முக்கிய உதாரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் செயல்படும் காற்றாலை திட்டங்களைக் குறிப்பிடலாம். இங்கு செயல்படும் காற்றாலை திட்டங்கள் மூலம் ஏராளமான மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது

இதையும் படியுங்கள்:
உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் – 12 ஜூன்! குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பது எங்கே?
World Wind Day

காற்று மாசுபாடு:

உயிர்வாழ முக்கிய தேவையான காற்று இன்று நவீனமயமாக்கல் மற்றும் தொழிற்சாலைகளின் அதிகரிப்பு காரணமாக அதிக மாசு அடைந்து வருகிறது. கார்களின் புகை, தொழிற்சாலைக் கழிவுகள், மற்றும் காட்டுத் தீ ஆகியவை காற்றில் நுண்ணிய துகள்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் வாயுக்களை கலக்கின்றன. இது சுவாசக் கோளாறுகள், இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

காற்று மாசுபடுவதைத் தவிர்க்க சில வழிகள்:

  1. கார்களையும் ஸ்கூட்டர்களையும் குறைவாகப் பயன்படுத்தி, பொதுப் போக்குவரத்தைத் தேர்ந்தெடுங்கள்.

  2. குறைந்த தூரங்களுக்கு நடந்து செல்வதையோ அல்லது சைக்கிள் ஓட்டுவதையோ பழக்கப்படுத்துங்கள். இதனால் உடல் ஆரோக்கியமும் மேம்படும், காற்று மாசுபாடும் குறையும்.

  3. பாரம்பரிய வாகனங்களைவிட மின்சார வாகனங்கள் குறைவான காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன என்பதால் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துங்கள்.

  4. மரங்கள் காற்றைச் சுத்திகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, வீடுகளிலும் சாலையோரங்களிலும் மரங்களை நட்டு வளர்ப்பது காற்று மாசுபாட்டைக் குறைக்கும்.

  5. குப்பைகளை எரிப்பது ஆபத்தானது மட்டுமல்ல, காற்று மாசுபாட்டையும் அதிகரிக்கும். குப்பைகளை மறுசுழற்சி செய்தல் அல்லது உரமாக மாற்றுவது சிறந்த வழியாக இருக்கும்.

  6. வாகனத்தைச் சீராக பராமரிப்பதன் மூலம் எரிபொருள் உமிழ்வை குறைத்து, காற்று மாசுபாட்டையும் குறைக்கலாம் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com