சரித்திரக் கதைகளின் சாதனை நாயகன்!

சரித்திரக் கதைகளின் சாதனை நாயகன்!

மரர் கல்கியின் அழியாப் புகழ் காவியமான 'பொன்னியின் செல்வன்' சரித்திரப் புதினம், நாவல் உலகின் மணிமகுடம். 1950களில் முதல் முறையாக கல்கி வார இதழில் வெளியான இந்த நாவலுக்கு ஓவியர் மணியம் அவர்களின் அழகோவியங்கள் அழகூட்டின என்றால், 1968களில் கல்கி வார இதழில் பொன்னியின் செல்வன் நாவல் மீண்டும் வெளியானபோது அதற்கு ஓவியர் வினு அவர்களின் கண்கவர் வண்ணத் தூரிகை ஓவியங்கள் பலப்பல புது வாசகர்களைக் கவர்ந்தன என்றால் அது மிகையாகாது.

புதிதாக நாவல் ஒன்று, ஒரு இதழில் வெளியாகிறதென்றால் அதற்கு முன்பு, பல விளம்பரங்கள் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் 1968களில் பொன்னியின் செல்வன் நாவல் இரண்டாம் முறையாக கல்கி இதழில் வெளியாகும் முன்பாக, ஒருசில வாரங்களுக்கு அறிவிப்புகள் ஓவியர் வினு அவர்களின் எழில்மிகு ஓவியங்களோடு விளம்பரங்களாகப் பதிப்பிக்கப்பட்டன. நவீன வசதிகள் எதுமில்லாத அந்தக் காலகட்டத்தில், கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை பேசும் பொற்சித்திரங்களாக அவை மிளிர்ந்தன.
அறிவிப்பு விளம்பரங்களில் மட்டுமின்றி, நாவல் முழுமைக்கும் ஓவியர் வினு அவர்களின் ஓவியங்கள் உயிரூட்டின. அப்படிப் பொன்னியின் செல்வன் நாவலுக்கு கட்டியம் கூறுவதாக அமைந்த ஓவியர் வினு அவர்களின் விளம்பர சித்திரங்களைத்தான் நாம் இங்கே காண்கிறோம்.
(நன்றி : கல்கி களஞ்சியம்)
https://kalkionline.com/Archives/

புகழ் பெற்ற ஓவியர் வினு அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும், இன்றைய ஓவியத் தலைமுறைகள் அவரின் கைவண்ணத்தைக் கண்டு வியக்கும் விதமாகவும் அவரது ஓவியப் படைப்புகள் சிலவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். மேலும் ஓவியர் வினு அவர்கள், 'பொன்னியின் செல்வன்' நாவலுக்கு சித்திரம் வரைந்த மறக்க முடியாத அனுபவங்களை, அவரது மகள் கல்யாணி இங்கு நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

"அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை, இரண்டாம் முறை கல்கி வார இதழில் வெளியிட பெரியவர் சதாசிவம் ஆசிரியர் தீர்மானித்து அதற்குப் பெரிய அளவில் விளம்பரம் செய்தார். ஓவியர் வினுவை அழைத்து கதாபாத்திரங்களை சினிமா விளம்பர பாணியில் பெரியதாக பேனர் வகையில் வரையச் சொல்லி, ஓர் லாரியில் அல்லது வேனில் எல்லா ஊர்களுக்கும் விளம்பரப் படங்களுடன் சென்று
வரச் செய்தார்.

மேலும், புதுமையாக சுவரொட்டி விளம்பரங்களும் அதற்கென்றே வரைந்து அச்சிட்டு வெளியிட்டார். இதனால் லட்சக்கணக்கான வாசகர்கள் படித்து விற்பனையும் அதிகரித்தது. தனது பாணியில் ஒவ்வொரு வாரமும் படங்களை வரைவது உற்சாகமளிப்பதாகவும், வாசகர் கடிதங்கள் மற்றும் நண்பர்களது பாராட்டுதல்களைப் பற்றியும் எங்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் எங்கள் தகப்பனார் ஓவியர் வினு.

கல்கியில் பணியாற்றியபோது பல தொடர்களுக்கு படங்கள் வரைந்தும், அட்டைப்படங்கள், தீபாவளி மலர் அட்டைப்படம் மற்றும் முகப்புப் படங்கள் வரைந்தும் உற்சாகம் பொங்கப் பணி புரிந்தார் எனது அப்பா.

என்னுடைய தந்தையாரின் நூற்றாண்டு
முடிவடைந்த நிலையில் அவரைப் பற்றி நினைவுகூற,
அதுவும் பொன்னியின் செல்வன் கொண்டாட்டத்தில் நினைவுகூற வாய்ப்பளித்த கல்கி நிறுவனத்தாருக்கு எங்கள் சார்பிலும் குடும்பத்தினர் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத்
தெரிவித்துக்கொள்கிறோம்."

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com