

முதல்வர் விஜய் அவர்களுடன் ஒரு சந்திப்பு
ஒரு முறை இப்போதைய முதல்வர் விஜய் (chief minister vijay) அவர்களை சந்தித்தது மறக்க முடியாத அனுபவம். ஹைதராபாதில் பிரபல அரசு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய போது ஒரு பயிற்சிக்காக எங்கள் அலுவலக பயிற்சி மையத்திற்கு சென்றிருந்தேன். எங்கள் அலுவலக பயிற்சி மையத்தில் அடிக்கடி பட ஷூட்டிங்குகள் நடைபெறுவது வழக்கம். (அங்கு ஷூட்டிங் வைத்தால் படம் நிச்சயம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை நிலவுவதாகச் சொல்லப்பட்டது.)
நான் சென்ற போது பயிற்சி அலுவலக வளாகத்தில் நடிகர் விஜய்யின் ‘வேட்டைக்காரன்’ பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. விஜய் மற்றும் சக நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை படமெடுத்துக் கொண்டிருந்தனர். முதல் நாள் விஜய் அவர்களை சந்திக்க முடியவில்லை. அந்தப் படத்தில் நடித்த பிற நடிகர்களை சந்தித்து சிறிது நேரம் பேசிவிட்டு போட்டோ எடுத்துக் கொண்டேன். சிலர் ஹைதராபாதில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி விசாரித்தார்கள்.
என்னுடன் பயிற்சிக்கு வந்தவர்களில் ஒரிருவரைத் தவிர அனைவருமே தெலுங்கர்கள். தமிழ் தெரியாது. அவர்களுக்கு நடிகர் விஜய்யை அவ்வளவாகத் தெரியவல்லை. விஜய் தன் ஷாட் முடிந்தவுடன் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பார். மிகவும் எளிமையானவர்.
முதல் நாள், 'அவருடன் நான் பேச முடியுமா?' என்ற தயக்கத்தில் இருந்தேன். அடுத்த நாள் இடைவேளையின் போது வெளியே வந்த விஜய்யை நானும் தமிழ் தெரிந்த ஒரு சிநேகிதியும் சந்தித்து எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தோம்.
சிறிது நேர உரையாடலுக்குப் பின் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டோம். என் சிநேகிதி வெளி நாட்டில் வசிக்கும் தன் மகள் விஜய்யின் ரசிகை என்று கூறி அவளுடன் பேச முடியுமா? எனக் கேட்டார்.
உடனே எந்தவொரு தயக்கமும் இன்றி அவளுடன் பேசினார்.
எங்களுக்கோ ஒரே ஆச்சரியம். பெரிய ஸ்டார். எந்தவொரு பந்தாவுமில்லாமல் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என்று வியந்து போனோம்.
விஜய் அவர்களின் இந்த எளிமைதான் மக்களின் மத்தியில் நம்மில் ஒருவர் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்பது நிஜம்.