

இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலக கோப்பை தொடர் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8ம் வரை நடைபெற உள்ளது. இதில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் இவர் அனைத்து ஆடுகளங்களிலும் அஞ்சாமல் சிக்ஸர் அடிக்கும் திறன் பெற்றவராக இருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி.- 20 போட்டியில் 14 பந்தில் அரை சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த அபிஷேக் ஷர்மா டி20 உலக கோப்பை வெல்ல உதவலாம்.
பஞ்சாப்பை சேர்ந்த அபிஷேக் ஷர்மாவின் குரு யுவராஜ் சிங். இவரை போல கிரிக்கெட்டில் ஜொலிக்க வேண்டும் என்பதே இவரின் இலக்கு. கடின பயிற்சி மேற்கொள்ளும் அபிஷேக் சர்மா பற்றி அவரது தந்தை கூறும் போது, இளம் வயதில் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருத்து குளிர்ந்த நீச்சல் குளத்தில் சிறிது நேரம் நீச்சல் பயிற்சி செய்வார்.
பிறகு கடின எடையை தூக்கி 'ஜிம்'மில் பயிற்சி செய்வார். .தியானத்தை முடித்து கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றால் அங்கு வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொண்டு நான்கு புறமும் சிதறடிப்பார். மனதாலும் உடலாலும் வலிமையாக இருப்பதால்தான் அபிஷேக் ஷர்மாவால் துணிச்சலாக சிக்ஸர் அடிக்க முடிகிறது என்றார்.
25 வயதான அபிஷேக் ஷர்மா பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் , அதிரடியாக ஆடும் பேட்டர்கள் தங்களுக்கு சாதகம் இல்லாத ஆடுகளத்தில் செட்டில் ஆகி பிறகு ரன்களை குவிப்பர் . ஆனால் அபிஷேக் ஷர்மா எந்த களத்திலும் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடுவதால் 12 முதல் 14 பந்துகளில் 60 முதல் 70 ரன்கள் எடுக்க முடிகிறது.
அதிரடி ஆட்டக்காரரான வெஸ்ட் இண்டீஸ் சேர்ந்த கெயில் கூட தனக்கு சாதகம் இல்லாத ஆடுகளத்தில் அதிரடி காட்ட சிறிது நேரம் எடுத்துக் கொள்வார்.
மேட்ச் வின்னராக ஜொலிக்கும் அபிஷேக் ஷர்மா வருகின்ற டி 20 உலக கோப்பை தொடரில் துவக்கத்தில் இதுபோல அதிரடி காட்டினால் இந்தியா கோப்பையை வெல்வது உறுதி. இவரது வாண வேடிக்கையையும் எதிர்பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.
ராணுவ கட்டுப்பாட்டுடன் பயிற்சி மேற்கொள்ளும் அபிஷேக் ஷர்மா பிப்ரவரி 7ஆம் தேதி துவங்கும் டி20 உலக கோப்பை தொடரில் தனது முழு திறமையை வெளிப்படுத்தி இந்தியாவிற்கு கோப்பையை பெற்று தந்தாள் 140 கோடி இந்தியர்களும் பெருமை கொள்வர் என்பதில் சற்றும் ஐயமில்லை.