கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பெங்களூரு அணி நிர்வாகம் நிதியுதவி!

RCB winning celebration
RCB winning celebration
Published on

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணி ஐபிஎல் 2025 கோப்பையை வென்றதை கொண்டாடும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆர்.சி.பி அணி நிர்வாகம் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) இணைந்து நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளன. இந்த துயர சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை (ஜூன் 4) சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ஆர்.சி.பி அணியின் வெற்றி கொண்டாட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பாதிக்கப்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணும் உயிரிழந்தவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துயர சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள ஆர்.சி.பி மற்றும் KSCA நிர்வாகங்கள், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளன. "இந்தத் துயர சம்பவத்துக்கு நாங்கள் மனதார வருந்துகிறோம். இந்தக் கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம். இந்த இழப்பீடு மனித உயிரின் மதிப்பைத் தீர்மானிக்கவோ அல்லது மாற்றவோ அல்ல, மாறாக அவர்களின் துக்க நேரத்தில் அவர்களுக்கு ஆதரவையும், ஆறுதலையும் அளிக்கும் என்று நம்புகிறோம்" என்று கூட்டாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சத்தான கேரளா ஸ்பெஷல் கோதுமை ஒரட்டி, பால் கஞ்சி மற்றும் புழுக்கு செய்யலாம் வாங்க..!
RCB winning celebration

இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடக அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து துணை கமிஷனர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் கோப்பையை 18 ஆண்டுகளில் முதல்முறையாக வென்ற ஆர்.சி.பி அணிக்கு கிடைத்த இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி, கூட்ட நெரிசலில் ஏற்பட்ட துயர சம்பவத்தால் பெரும் சோகமாக முடிந்தது, பெங்களூரு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com