அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணியில் விளையாடவிருக்கும் 15 பேரின் பட்டியல் கசிந்துள்ளது. இதுகுறித்தான முழு விவரத்தைப் பார்ப்போம்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை சாம்பியன்ஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. சாம்பியன்ஸ் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இதற்கு பல கோடிகளை பிசிபி செலவழித்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 6 நாடுகள் ஒப்புதல் தெரிவித்த நிலையில், இந்தியா மட்டும் மறுப்பு தெரிவித்தே வந்தது.
இதனையடுத்து சமீபத்தில் ஒரு மீட்டிங் நடத்தப்பட்டது. இதில் ஹைப்ரிட் முறையில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் சில நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டது.
அதாவது இனி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் ஐசிசி போட்டிகளை, துபாயில்தான் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. இதனை ஐசிசியும் ஏற்றுக்கொண்டது.
சாம்பியன்ஸ் போட்டிகள் கராச்சி, லாகூல், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடைபெறும். இந்தியாவின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும்.
அந்தவகையில் இந்திய அணியில் எந்த வீரர்கள் பங்கேற்பார்கள் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது 2023ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்ற வீரர்கள் பட்டியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாம்.
கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர் போன்றவர்களை நீக்கிவிட்டு, இளம் வரர்கள் யாஷஸ்வி ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன், திலக் வர்மா போன்றவர்களை சேர்க்க வாய்ப்புள்ளது. அதேபோல், சுழற்பந்து வீச்சாளர்கள் இடங்களுக்கு அக்சர் படேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் போன்றவர்கள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா, ஷமி, சிராஜ், ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பெறுவர் என்றும் சொல்லப்படுகிறது. அந்தவகையில் ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, யாஷஸ்வி செய்ஸ்வால், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, அக்சர் படேல், கில், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, ஷமி, ராணா, சிராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.