
இந்திய கிரிக்கெட் அணியின் மிகப் பிரபலமான முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் தனது 16 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து விட்டார். கிட்டத்தட்ட 20 வருட கிரிக்கெட் வாழ்வில் சாதனைகள் பல படைத்தார் சச்சின். உலகின் கடினமான ஆடுகளங்களில் கூட சாதாரணமாக சதமடித்த பெருமைக்குரியவர் சச்சின். சமீபத்தில் ஐபிஎல் தொடரில் கலக்கிய 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி, சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு பேசப்படுகிறார். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இவரது வயது தான்.
சச்சின் டெண்டுல்கர் 16 வயதிலும், வைபவ் சூர்யவன்ஷி 14 வயதிலும் கிரிக்கெட்டில் நுழைந்தனர். ஆனால் சச்சின் கிரிக்கெட்டிற்கு வந்ததே சர்வதேச அளவில் என்பதை மறக்க வேண்டாம். இந்திய அளவிலான ஐபிஎல் தொடரில் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைத்தாலும், அவர் சாதிக்க வேண்டியது இன்னும் ஏராளமாக உள்ளது. இளம் வீரர்களை தூக்கி விடும் ஐபிஎல் தொடரில், சூர்யவன்ஷி உலக அளவில் பிரபலமாகி விட்டார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சூர்யவன்ஷி அடித்த அதிவேக சதம், அனைவரையும் கவர்ந்தது. பலரும் ஆச்சரியத்தில் உறைந்தனர். அடுத்தடுத்தப் போட்டிகளில் அதிரடியாகவே விளையாடினார் சூர்யவன்ஷி. 2025 ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய சூர்யவன்ஷி 206.55 ஸ்டிரைக் ரேட்டுடன் 252 ரன்களைக் குவித்துள்ளார். இந்தத் தொடரில் அதிக ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய வீரரும் இவர் தான்.
மிக இளம் வயதிலேயே ஐபிஎல் வாய்ப்பு கிடைத்தமையால், வருங்காலத்தில் சச்சின் டெண்டுல்கரைப் போல் இந்தப் பையன் வருவான் என பல முன்னாள் வீரர்கள் ஒப்பிட்டு பேசத் தொடங்கி விட்டனர். ஆனால், சச்சினுடன் ஒப்பிடும் அளவிற்கு சூர்யவன்ஷி அப்படி என்ன செய்து விட்டார் என இன்னொரு தரப்பும் விவாதம் செய்கிறது. சூர்யவன்ஷி செய்தது சாதனை தான், இருப்பினும் இப்போதே சச்சினுடன் ஒப்பிட்டு அவருக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டாம். ஏனெனில் இந்த அழுத்தம் மன ரீதியாக சூர்யவன்ஷியை பாதிக்கக் கூடும்.
இதுமட்டுமின்றி உலகின் மிகக் கடினமான பெர்த் ஆடுகளத்தில் 18 வயதிலேயே சதமடித்தவர் சச்சின் டெண்டுல்கர். அவருடன் சூர்யவன்ஷியை ஒப்பிட்டு பேசுவதில் அர்த்தமே இல்லை என ஸ்டீவ் வாக் கூறியுள்ளார். சச்சின் போன்ற வீரர்களை மிகவும் அரிதாகவே பார்க்க முடியும். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பல வெளிநாட்டு வேகப் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடியுள்ளார் சச்சின். அவர் படைக்காத சாதனைகளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு சாதனைகளைச் செய்து விட்டார். மேலும் 20 வருடங்கள் யாரும் தொடர்ந்து கிரிக்கெட்டை விளையாடியதில்லை. இதனை செய்து காட்டியவரும் சச்சின் தான்.
அப்பேற்பட்ட கிரிக்கெட் வீரருடன் ஒரு இளம் வீரரை ஒப்பிட்டு பேசுவது அழகல்ல. சூர்யவன்ஷி U-19 இந்திய அணி சார்பில் விளையாடி வருகிறார். இவர் பல வருடங்கள் விளையாடினாலும், சச்சினின் சாதனைகளைத் தகர்ப்பது கடினம். இருப்பினும் இந்த வயதில் கிரிக்கெட் உலகையே தன்னை நோக்கி பார்க்க வைத்ததும் ஒரு சாதனை தான். இவரது கிரிக்கெட் பயணம் சிறப்பாக அமையட்டும். யாருடனும் இவரை ஒப்பிட்டு எதிர்பார்ப்பை அதிகப்படுத்த வேண்டாம்.