மறுபிறவி எடுத்ததுபோல உணர்கிறேன் – வருண் சக்கரவர்த்தி உருக்கம்!

Varun Chakravarthy
Varun Chakravarthy
Updated on

இந்திய கிரிக்கெட் அணியில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விளையாடுவது மறுபிறவி எடுத்ததுபோல உணர்வதாக வருண் சக்கரவர்த்தி பேசியுள்ளார்.

ஐபிஎல் போன்ற போட்டிகளில் விளையாடினாலும், வருண் சக்கரவர்த்திக்கு சில ஆண்டுகள் வரை இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கவில்லை. கடைசியாக 2021ம் ஆண்டு டி20 உலக கோப்பையில் வருண் சக்கரவர்த்தி விளையாடினார். அதன்பின்னர் ஒதுக்கப்பட்டே வந்தார். இதனையடுத்து தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வருண் சக்கரவர்த்தியை மீண்டும் இந்திய அணியில் விளையாட வைத்திருக்கிறார்.

அந்தவகையில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேச அணிக்கான டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி பந்து வீசினார். நான்கு ஓவர்கள் வீசிய வருண் 31 ரன்களை விட்டுக்கொடுத்தார். அவரது முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட் கொடுக்க வேண்டியது. ஆனால், நிஷாந்த் ரெட்டி ஈஸி கேட்சைத் தவறவிட்டுவிட்டார்.

இந்தப் போட்டியில் தனது செயல்பாட்டை குறித்து பேசிய வருண் சக்கரவர்த்தி, “மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் அடி எடுத்து வைத்திருக்கிறேன். இதை நினைக்கும் போது எனக்கு உணர்ச்சி வசமாக இருந்தது. இந்திய அணியின் ஜெர்சியை அணிவதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன். இது எனக்கு மறுபிறவி போல் இருந்தது. இந்திய அணியில் இடம் கிடைக்காத நேரத்தில் நான் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தேன். ஒரு பவுலர் என்ன செய்ய வேண்டுமோ, அந்த நடைமுறையை தொடர்ந்து பின்பற்றினேன். ஐபிஎல் தொடரிலும் விளையாடுவதற்கு முன் நான் அதை தான் செய்தேன்.

நான் எதிர்காலத்தைவிட நிகழ்காலத்தில் என்ன செய்ய வேண்டு என்பதில் கவனமாக இருப்பேன். ஆகையால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்பது குறித்து நான் கவலைப்படாமல், தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன். நான் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டேன். ஐபிஎல் தொடருக்கு பிறகு டிஎன்பிஎல் தொடரில் விளையாடினேன். திறமை வாய்ந்த வீரர்களுடன் விளையாடியது எனக்கு நல்ல பயனை தந்தது.

இதையும் படியுங்கள்:
தோனி ஐபிஎல் விளையாடவே இந்த விதி அறிமுகப்படுதத்தப்பட்டது – முகமது கைஃப்!
Varun Chakravarthy

அஸ்வின் எனக்கு துணையாக இருந்தார். அதனாலேயே நாங்கள் பட்டம் வென்றோம். டிஎன்பிஎல் போட்டிகள் நல்ல பயிற்சி காலமாக அமைந்தது. இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பிறகு பலரும் நான் அவ்வளவுதான் என்று நினைத்து விட்டார்கள். நாம் தொடர்ந்து உச்ச கட்டத்தில் இருக்க வேண்டும். தொடர்ந்து வாய்ப்பு உருவாக்க வேண்டும். இம்முறை எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து என்னுடைய சிறப்பான பணியை மேற்கொண்டு அணியில் நீடிப்பேன் என்று நம்பிக்கை கொள்கிறேன்.” என்று பேசினார்.

மேலும் முதல் ஓவரில் விடப்பட்ட கேட்ச் குறித்து பேசுகையில், இது எல்லாம் அடிக்கடி நடப்பவைதான். இதுகுறித்து கவலைப்பட ஒன்றும் இல்லை. கடவுளுக்கு நன்றி என்று பேசினார்.

logo
Kalki Online
kalkionline.com