

சர்வதேச கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது உலக கோப்பை கால்பந்து போட்டிகள். உலகின் 23வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் இந்தாண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.
தற்போதைய ஃபிஃபா (FIFA) கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிகவும் பிரம்மாண்டமானதாகும். இதற்கு முன்பு 32 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், முதல் முறையாக 48 நாடுகள் களமிறங்குகின்றன. கூடுதல் அணிகள் மற்றும் போட்டிகள் இருப்பதால், இத்தொடர் 39 நாட்கள் வரை நடைபெறுகிறது.
48 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவை முதல் முறையாக அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 3 நாடுகளில் மொத்தம் 16 மைதானங்களில் போட்டி நடைபெறும். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. எனவே, அதைக் குறிக்கும் வகையில், முதல் முறையாக, மூன்று விளையாட்டுச் சின்னங்களை உருவாக்கியுள்ளது FIFA. அவற்றின் பெயர்கள் மேப்பல் (கனடா), ஸாயு (மெக்சிகோ), கிளட்ச் (அமெரிக்கா).FIFA world cup 2026
1934 ம் ஆண்டு முதல் முறையாக 13 நாடுகள் மட்டுமே உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் களம் கண்டது. 1982 ம் ஆண்டு 24 நாடுகள் களம் கண்டது. கடந்த 2022 ம் ஆண்டு 32 நாடுகள் கலந்து கொண்டது. கடைசி உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்றன. இந்த முறை முதன் முதலாக 48 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. ஃபிஃபா தரவரிசையின்படி கால்பந்துப் போட்டிகளை 211 நாடுகள் விளையாடுகின்றன. இருந்தும் இந்த உலகக் கோப்பையை 8 நாடுகள் மட்டுமே வென்றுள்ளது ஆச்சரியத்தை தருகிறது.
தற்போதைய உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற 48 நாடுகளில் 20 நாடுகளின் ஜனத்தொகை நமது தலைநகர் டெல்லியின் ஜனத்தொகைக்கும் குறைவுதான். அதில் ஒன்று கரீபியன் தீவுகளில் உள்ள குராக்கோ நாடு. இதன் ஜனத்தொகை 1.6 லட்சம் தான்.
இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் 1248 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். அதில் முதல் முறையாக 89 அனுபவம் வாய்ந்த வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். நடக்கவிருக்கும் 104 போட்டிகளில் 78 போட்டிகளை அமெரிக்கா நடத்துகிறது. இத்தனை போட்டிகளை நடத்தும் முதல் நாடு அமெரிக்கா தான். மெக்சிகோ மற்றும் கனடா தலா 13 போட்டிகளை நடத்துகிறது.
இந்த 2026 உலகக் கோப்பையில் ஃபிஃபா (FIFA) 8 புதிய விதிகளை அமல்படுத்துகிறது.
கால்பந்து விளையாட்டில், வீரர்கள் தாங்கள் உதட்டசைத்துப் பேசுவது கேமராவில் பதிவாவதையோ அல்லது மற்றவர்கள் கேட்பதையோ தடுப்பதற்காக, தங்கள் கைகளால் வாயை மூடிக்கொள்வது வழக்கம். இந்த ஃபிஃபா உலகக் கோப்பையில் வீரர்கள் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவ்வாறு செய்பவர்கள் பிடிபட்டால், நடுவர் சிவப்பு அட்டை வழங்கலாம்.
ஒரு அணி ஒரு வீரரை மாற்றினால், அது 10 வினாடிகளுக்குள் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், மாற்றப்பட்ட வீரர் ஒரு நிமிடத்திற்கு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவார்.
நடுவரின் முடிவால் கோபமடைந்து எந்தவொரு அணியும் ஆடுகளத்தை விட்டு வெளியேறினால், அந்த அணி முழுவதற்கும் சிவப்பு அட்டை வழங்கப்படும்.
நடுவர் தவறான கார்னர் கிக் வழங்கினாலோ அல்லது ஒரு வீரர் இரண்டு மஞ்சள் அட்டைகளைப் பெற்றாலோ, VAR தலையீட்டின் மூலம் அந்த முடிவை மாற்றியமைக்க முடியும்.
கார்னர் கிக், பெனால்டி அல்லது த்ரோ-இன் சமயத்தில், ஒரு வீரர் தரையில் விழுவதற்கு முன்பு ஃபவுல் செய்கிறாரா என்பதையும் VAR சரிபார்க்க முடியும். தற்போது, ஆட்டம் நடந்துகொண்டிருக்கும்போது மட்டுமே VAR பயன்படுத்த முடியும்.
த்ரோ-இன் அல்லது கோலின் போது கோல்கீப்பர்கள் அல்லது வீரர்கள் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்வார்கள், ஆனால் இப்போது இதில் ஒரு கவுண்ட்டவுனும் அடங்கும். நேர வரம்பு 5 வினாடிகள் ஆகும், இதை மீறினால், எதிரணிக்கு ஒரு கார்னர் கிக் அல்லது த்ரோ-இன் வழங்கப்படும்.
காயம் காரணமாக மருத்துவக் குழு கோல்கீப்பரைப் பரிசோதிக்கும் பட்சத்தில், அந்த நேரத்தில் டக்அவுட்டில் எந்த வீரரும் பயிற்சி ஊழியர்களிடம் பேசக்கூடாது.
காயம் காரணமாக ஒரு வீரர் ஆடுகளத்திற்கு வெளியே இருந்தால், அவர் ஒரு நிமிடம் கழித்துதான் மீண்டும் ஆடுகளத்திற்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்.
இந்த FIFA 2026 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் 28 ஆட்டங்களை இலவசமாகக் காணலாம். இலவமாகக் காணக்கூடிய ஆடடங்களில்... - தொடக்க ஆட்டம் - அரையிறுதி ஆட்டங்கள் - இறுதியாட்டம் ஆகியவை அடங்கும். 2022இல் நடந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின்போது 9 ஆட்டங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்பப்பட்டது.
இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியை மைதானத்திற்கு காண வரும் ரசிகர்கள் தண்ணீர் பாட்டில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. முன்பு ரசிகர்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டில்களை எடுத்து வந்து மைதானத்தில் தண்ணீர் பிடித்துக் கொள்வது வழக்கம். ஆனால் பாட்டில்களை மைதானத்தில் தூக்கி எறிந்து வீரர்கள் காயமடைய வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு கருதி அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஃபிஃபா விளக்கம் அளித்துள்ளது.