இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில் அவர் குணம் எனக்கு பிடிக்கும் என்று கவுதம் கம்பீரைப் புகழ்ந்துப் பேசியுள்ளார் அஸ்வின்.
2024 ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில் அதன் முதல் ஆட்டம் சிஎஸ்கே அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே வருகின்ற மார்ச் 22ம் தேதி சென்னைச் சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. சென்னை மக்கள் ஐபிஎல் போட்டி என்றாலே நேரில் பார்க்காமல் விடமாட்டார்கள். அதுவும் சென்னை மற்றும் பெங்களூரு போட்டி என்றால் சொல்லவா வேண்டும். டிக்கெட்டுகள் கிடைக்கவே இல்லை என்று குமுறும் ரசிகர்களுக்கு மத்தியில் இந்திய வீரரும் ஒருவர். ஆம்! அஸ்வின் குடும்பத்தாருக்கே டிக்கெட் கிடைக்கவில்லை என்று அவர் ட்வீட் செய்திருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்தநிலையில், அஸ்வின் சிஎஸ்கே அணிக்குப் போட்டியாக இருக்கும் ஒரு சிறந்த, பலம் வாய்ந்த அணி என்றால் அது கவுதம் கம்பீர் ஆலோசகராகச் செயல்படும் கேகேஆர் அணிதான் என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “ சிஎஸ்கே அணிக்குக் கடும் போட்டியாக இருக்கும் மும்பை அணியைத் தவிர இன்னொரு அணி உள்ளது என்றால் அது கேகேஆர் அணிதான். 2012ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நான் சிஎஸ்கே அணியில் இருந்தேன். அப்போது மூன்றாவது முறையாக சிஎஸ்கே அணி ஹாட்ரிக்கில் கோப்பையை வெல்லும் என்று அனைவரும் எண்ணிக்கொண்டிருந்த நிலையில்தான் அது நடந்தது.
அந்தப் போட்டியில் கம்பீர் அணி எங்களை வென்றது. அதாவது 2012ம் ஆண்டில் கேகேஆர் அணி ஐபிஎல் தொடரைக் கைப்பற்றி கோப்பையை வென்றது. எந்த சூழலிலும் கம்பீரின் விட்டுத்தராத மனப்பான்மை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் அணியில் இல்லாமல் எதிரணியிலிருந்தோ அல்லது மற்ற அணியிலிருந்தோ பார்த்தால் அவர்மீது கோபம் வரும். ஆனால் அவருடைய அணியிலிருந்து பார்க்கும்போது அவருடைய குணம் அனைவருக்குமே பிடிக்கும்.
தற்போது கேகேஆர் அணிக்காக அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இருக்க வேண்டிய சரியான இடம்தான் அது. ஆகையால் இந்தமுறை கேகேஆர் அணி வீரர்கள் கடுமையாகப் போட்டியிடப் போகிறார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.