

10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா தனது 2-வது லீக்கில் ஆப்பிரிக்க அணியான நமிபியாவை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று சந்தித்தது.
இதில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் ஜெராக்ட் எராஸ்மாஸ் பந்து வீச்சை தேர்வு செய்ய அதனை தொடர்ந்து இந்தியா அணி களத்தில் இறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்கினர்.
இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி நாலாபுறமும் பந்துக்களை சிதறடித்து 24 பந்தில் 61 ரன்கள் குவித்தார். திலக் வர்மா 25 ரன்களிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பாண்ட்யாவும் நானும் சளைத்தவன் அல்ல என்பதற்கிணங்க அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை பறக்க விட்டு 28 பந்தில் 52 ரன்கள் குவித்தார். மற்றொரு ஓபனர் சஞ்சு சாம்சனும் அதிரடியாக விளையாடி, 8 பந்தில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 22 ரன்களை குவித்தார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. நமீபியாவின் ஜெர்ஹார்டு எராமஸ் 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
அதனை தொடர்ந்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நமீபியா அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தள்ளாடியது.
டீன் கேம்ப் 29 ரன்னும், ஜேன் பிரிலிங்க் 22 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் இந்திய அணியின் பந்து வீச்சில் நிலைத்து நிற்கமுடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில், நமீபியா 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம், இந்திய அணி, டி20 உலகக் கோப்பையில், தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்று, இந்திய அணி வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், பாண்ட்யா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
மேலும், சூப்பர் 8 சுற்று வாய்ப்பும் இந்திய அணிக்கு பிரகாசமாக இருக்கிறது. குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டதால், வரும் ஞாயிற்று கிழமை (பிப்ரவரி 15-ம் தேதி) நடைபெறும் லீக் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் எந்த அழுத்தங்களும் இல்லாமல் விளையாடவே அதிக வாய்ப்புள்ளது.