

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கு பெற்ற 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் 2 வது போட்டி , ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கியது. ஏற்கனவே இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார்.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடித்து 20 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பவர்பிளேயின் முடிவில் இந்திய அணி 53/2 ரன்களை எடுத்திருந்தது. அபிஷேக் ஷர்மா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், ஆயினும் இந்திய அணி தடுமாறாமல் இஷான் கிஷன் பார்த்துக் கொண்டார்.
மிகவும் அதிரடியாக விளையாடி ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்களை கதற விட்ட இஷான், இந்திய அணி இமாலய ஸ்கோரை எட்ட உதவினார். 44 பந்துகளை சந்தித்த அவர் 2 பெரிய சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகளை அடித்து 81 ரன்களை விளாசினார். மறுபுறம் அவருக்கு உறுதுணையாக திலக் வர்மாவும் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
3 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளை அடித்து 60 ரன்கள் அடித்து திலக் இறுதிவரை அவுட்டாகமல் இருந்தார். இஷான் கிஷன் மற்றும் திலக் ஆகிய இருவரும் அரை சதம் கடந்ததால், நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 219 ஸ்கோரை எட்டியது.
220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. அந்த அணியின் பிரையன் பென்னட் அதிரடியாக விளையாடி அணிக்கு நல்ல துவக்கத்தினை கொடுத்தார். 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடித்த பென்னட்டை (32) இஷான் கேட்ச் பிடித்து வெளியேற்றினார். அடுத்து களமிறங்கிய டியான் மையர்ஸ் 12 ரன்கள் , ரியான் பெர்ல் 20 ரன்கள் , கேப்டன் சிக்கந்தர் ராசா டக் அவுட் என்று அணியின் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற, ஒரு கட்டத்தில் ஜிம்பாப்வே அணி 8.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களை மட்டுமே எடுத்து தத்தளித்தது.
அதன் பின்னர் களமிறங்கிய தடிவனசே மருமனே 24 ரன்களும் , பிராட் இவன்ஸ் 19 ரன்களும் அடித்து சிறிது நேரம் அணியை மீட்க போராடினர். அதன் பிறகு வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, ஜிம்பாப்வே அணி 129 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் சார்பாக சிறப்பாக பந்து வீசிய அபிஷேக் ஷர்மா மிகக் குறைவாகவே ரன்களை வழங்கி,3 விக்கட்டுகளை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரிய பங்களித்தார்.
இந்த போட்டியில் அறிமுகமான யாஷ் தாக்கூர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் 81 ரன்கள் குவித்த இஷான் கிஷனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி முதன்முறையாக தொடரைக் கைப்பற்றியுள்ளது. தொடர் தோல்விகளில் இருந்து இந்திய அணி மீண்டது ரசிகர்களை மகிழ்ச்சிக்கு ஆளாகியுள்ளது.