முகமது ஷமிக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவருக்கு இங்கிலாந்து வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்க பிசிசிஐ முடிவுசெய்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் முதலில் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றாலும், சில போட்டிகளுக்குப் பின்னர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த நேரத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார் ஷமி. அந்த அளவுக்கு முழு மூச்சுடன் இறங்கி விளையாடிய ஷமிக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து இந்திய அணி தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை எதிர்த்து விளையாடிய எந்த தொடர்களிலும் ஷமி பங்குப்பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் உலககோப்பைக்குப் பின்னர் இன்னும் எந்த போட்டிகளிலுமே ஷமி விளையாடவில்லை. காரணம், அவருக்கு இன்னும் காயம் குணமாகவில்லை என்பதுதான்.
இந்தநிலையில் இந்திய அணி அடுத்து, இங்கிலாந்தை எதிர்த்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த 5 டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த பட்டியலில் முகமது ஷமி இல்லை.
ஆனால் பிசிசிஐ கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஷமியை களமிறக்கலாம் என்று திட்டம் தீட்டினர். அதற்காக ஷமியை மருத்துவர்களிடமும் சிறப்பு நிபுணர்களிடமும் அழைத்துச் சென்று உடற்தகுதி பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது அவருடைய கணுக்கால் காயம் இன்னும் குணமாகவில்லைஎன்று தெரியவந்தது.
இப்படியே சென்றால் ஷமியால் அடுத்து நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலககோப்பை தொடர் என எந்த போட்டிகளிலும் விளையாட முடியாது என்பதை உணர்ந்த பிசிசிஐ அவசர அவசரமாக ஒரு முடிவை எடுத்தது. முகமது ஷமியை இங்கிலாந்து வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளது பிசிசிஐ.
பிசிசிஐ இந்த முடிவை எடுத்ததற்கும் போதிய காரணம் உள்ளது. ஏனெனில் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு இரு தூண்களாக இருப்பது பூம்ராவும் ஷமியும்தான். இருவரும் இணைந்து மாறி மாறி பந்து வீசினால் எதிரணியால் மூச்சு கூட விடமுடியாது. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் தாறுமாறாக விளையாடும் இங்கிலாந்து அணியை எதிர்க்கொள்ளும் திறமை ஷமிக்கே உள்ளது.
இங்கிலாந்து வீரர்கள் பவுண்டரி அடிக்க முடிவுசெய்தாலே ஷமியின் விக்கெட்டை சந்திக்க வேண்டும் என்பது கடந்த ஆண்டு உலககோப்பையிலேயே தெரிந்துவிட்டது. இதனால் ஷமி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை என்றால் அது அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.