

இங்கிலாந்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி தொடங்கியது. இங்கிலாந்தில் இந்திய ஆடவர் அணி டி 20 தொடரில் மோசமான செயல்பாடுகளால் தோல்வியுற்றதைப் போல, மகளிர் அணி செயல்பாடு இல்லை. இந்திய மகளிர் அணி டி 20 உலகக் கோப்பை தொடரில் போராடி லீக் சுற்றில் வெளியேறினாலும் அது உடனடியாக தன்னை புதுப்பித்துக் கொள்ள தவறவில்லை!
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் 83 ரன்களை ஸ்மிருதி எடுத்தார் , கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 58 ரன்களும் , தீப்தி ஷர்மா 57 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 270 ரன்கள் எடுத்தது.
முதல் இன்னிங்சில் தனது விரட்டலை தொடங்கிய இங்கிலாந்து அணியை , இந்திய பந்துவீச்சாளர் கிரந்தி கவுட் அருமையாக கட்டுப்படுத்தினார். இங்கி அணி கேப்டன் நாட் சீவர் புருண்ட் மற்றும் அமி ஜோன்ஸ் ஆகியோர் அணியினை மீட்கப் போராடினார்கள். நாட் சீவர் 44 ரன்களும், அமி 52 ரன்களை எடுக்க மற்ற வீராங்கனைகள் கை கொடுக்காததால் விரைவிலேயே அனைத்து விக்கட்டுகளையும் இங்கிலாந்து இழந்தது.முதல் இன்னிங்ஸ் முடிவில் 170 ரன்கள் மட்டுமே குவித்து இந்திய அணியை விட 100 ரன்கள் பின் தங்கியிருந்தது. இந்திய அணியின் கிரந்தி கவுட் 37 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு மீண்டும் ஸ்மிருதி மந்தனா கை கொடுத்தார். இந்த இன்னிங்சில் 70 ரன்கள் அடித்து , இரு இன்னிங்சிலும் அரை சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தி கொடுத்தார். மறுபுறம் யாஸ்திகா பாட்டியா (113) சதமடித்து ஸ்மிருதிக்கு நல்ல ஒத்துழைப்பையும் அளித்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் முதல் சதமாகும் , அதுமட்டுமல்ல லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு வீராங்கனை அடித்த முதல் சதம் ஆகும்.
ரிச்சா கோஷ் (50) அரைசதம் அடித்து அணிக்கு தனது பங்களிப்பையும் அளித்தார். இந்திய அணி 341/7 ரன்கள் குவித்ததும் தனது ஆட்டத்தினை முடித்துக் கொண்டு இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தது. இம்முறை ஸ்னே ரானா இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்தினார்.
ஆரம்பத்தில் இருந்தே இங்கிலாந்து அணி ரன்களை எடுக்க தடுமாறி வந்தது. அமி ஜோன்ஸ் 54 ரன்களும் சோபி எக்கல்ஸ்டன் 50 ரன்களும் எடுத்து அணியை மீட்க போராடினர். ஆயினும் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்களே குவிக்க முடிந்தது. இந்திய அணி 270 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. இந்த டெஸ்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய கிரந்தி கவுட் ஆட்ட நாயகி விருதை பெற்றார். மகளிர் அணியின் வெற்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.