

சமந்தா நடிப்பில் வெளிவந்த (மா இன்டி பங்காரம்) 'எங்கள் தங்கம்' திரைப்படம் ஓடிடி ரிலீஸ் எந்த ஓடிடியில் எப்போது தெரியுமா?
நடிகை சமந்தாவின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த படி மீண்டும் "கம் பேக்" காக புது எனர்ஜியுடன் அவரே தயாரித்து நடித்த படம் தான் 'மா இன்டி பங்காரம்'.இந்தப் படம் தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் வெளியானது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப்படங்களில் அதிக கவனம் பெற்றவர். தனது இயல்பான அழகிலும் மிகையற்ற நடிப்பிலும் குறிப்பாக பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் திறன் கொண்டவர்.
தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராகக் கருதப்பட்ட நிலையில் இவரது சொந்த வாழ்வில் பல சோதனைகள் ஏற்பட்டது. தெலுங்கு ஹீரோவான நாக சைதன்யாவைக் காதலித்து மணந்து கருத்து வேறுபாட்டால் விவாகரத்து,உடல்நல பாதிப்பு என பல வேதனைகளை அனுபவித்தவர்.முக்கியமாக சரும பாதிப்பு தந்த மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று நலமுடன் மீண்டு வந்தார். இதனால் சில காலம் அவர் நடிப்பிலிருந்து விலகி இருந்தார். உடல் பாதிப்பு தந்த அனுபவத்தைத் தொடர்ந்து சமூகப் பணிகளிலும் அக்கறை காட்டி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ உதவிகளை வழங்கும் Pratyusha Support என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ள அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதுடன் தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், சமந்தா தயாரிப்பில் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள புதிய திரைப்படமான ‘மா இன்டி பங்காரம்’(Maa Inti Bangaaram) கடந்த மாதம் 19ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இதில் கதாநாயகியாக சமந்தா அதிரடி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இயக்குநரும், சமந்தாவின் கணவருமான ராஜ் நிடிமொரு கதை எழுதியுள்ளது சிறப்பு. சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவந்துள்ள இந்தப் படத்திற்கு தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஸ்வர்ணா (சமந்தா) தன் கணவர் அனிருத்துடன் (திகந்த்) காதல் திருமணம் செய்துகொண்டு கணவரின் பெரிய கூட்டுக் குடும்பத்தின் அன்பைப் பெற முயல்கிறார். குடும்பத்தில் ஒருவராக அவர் அனுசரணையுடன் வாழும் அதே வேளையில், அவரது கடந்த காலத்தின் ரகசியங்கள் மற்றும் கொடூரமான வில்லன் கருணா (குல்ஷன் தேவய்யா) மூலமாக குடும்பத்திற்கு ஆபத்து வருகிறது. அந்த ஆபத்திலிருந்து தனது குடும்பத்தை ஸ்வர்ணா எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் முக்கிய கதையாக சமந்தாவின் அதிரடி ஆக்சன் காட்சிகளோடு உள்ளது.
முதல் பாதியில் அமைதியான மற்றும் பொறுப்பான மருமகளாகவும், இரண்டாம் பாதியில் அதிரடியான ஆக்ஷன் நாயகியாகவும் சமந்தா தனது திரை ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். சேலை கட்டிய சமந்தா செய்யும் அட்டகாசமான சண்டைக்காட்சிகள் மற்றும் கார் சேஸிங் காட்சிகள் ரசிகர்களை பிரமிக்க வைக்கின்றன.
இதுவரை இல்லாத வகையில் அதிரடி கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளது அவரது ரசிகர்களால் பெருமளவு வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வில்லன் குல்ஷன் தேவைய்யா அமைதியாக இருந்தாலும், நாயகிக்கும் வில்லனுக்கும் இடையிலான மோதல் இன்னும் அழுத்தமாக இருந்திருந்தால் பரவாயில்லை எனும் சில குறைகள் இருந்தாலும் குடும்பப் பின்னணியுடன் கூடிய ஒரு மாஸ் கமர்ஷியல் திரைப்படத்தை விரும்புபவர்களுக்கும், சமந்தாவின் தீவிர ரசிகர்களுக்கும் இது ஒரு முழுமையான ரசிக்கத்தக்க அனுபவத்தை நிச்சயம் தரும் என்பதே விமர்சனமாக இருக்கிறது.
இந்த நிலையில், ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் 22 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.13 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் விரைவில் ரூ.200 கோடி வசூலை ஈட்டி விடும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக தெலுங்கு சினிமா வரலாற்றில் அதிரடி ஹீரோயின் படங்களில் அதிகம் வசூலித்து, முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
குடும்ப சென்டிமென்டுடன் அதிரடி காட்சிகள் கலந்த ஒரு கமர்ஷியல் விருந்தான கணவரின் கதைக்கு தயாரிப்பாளராகவும், முதன்மை நாயகியாகவும் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ள சமந்தாவின் 'மா இன்டி பங்காரம்' வரும் ஜூலை 17ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
தியேட்டர் சென்று பார்க்க முடியாத சமந்தாவின் எண்ணற்ற ரசிகர்கள் இந்த ஓடிடி வெளியீட்டை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.