கிரிக்கெட் விளையாட்டு உலகளவில் இவ்வளவு பிரபலமடைய, 1975-ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளின் பங்களிப்புடன் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டிகளே முக்கியக் காரணமாகும். அந்த வகையில், இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடர் 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெற்றியாளர் (Winner), இரண்டாம் இடம் (Runner-up) மற்றும் தனிநபர் விருதுகள் (Individual Awards) எனப் பல கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
1975-ஆம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றியாளருக்கான பரிசுத்தொகை சுமார் 4 முதல் 5 லட்ச ரூபாயாக மட்டுமே இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து, இறுதியாக 2023-ல் நடந்த உலகக்கோப்பையில் சுமார் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதேபோல், ஐபிஎல் போட்டிகளின் ஆரம்பத்தில் (2008) வெற்றியாளருக்கான பரிசு 4.8 கோடி ரூபாயாக இருந்தது. பின்னர் 2010–2013-ல் 10 கோடி, 2014–2015-ல் 15 கோடி என உயர்ந்து, 2016-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை 20 கோடி ரூபாயாகத் தொடர்ந்து நீடிக்கிறது.
இந்நிலையில், நடப்புச் சாம்பியனான பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதும் முதல் ஆட்டத்துடன், 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. மே 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில், மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட 13 மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடும்.
இந்த (IPL 2026) தொடரில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு சீசனில் பரிசுத்தொகை விவரம் பின்வருமாறு இருந்தது:
வெற்றியாளர் (Winner): ₹20 கோடி
இரண்டாம் இடம் (Runner-up): ₹12.5 – ₹13 கோடி
3-வது இடம்: ₹7 கோடி
4-வது இடம்: ₹6.5 கோடி
தனிநபர் விருதுகள்: ₹10 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை
ஆனால் இம்முறை ஐபிஎல் போட்டிக்கான பரிசுத்தொகை விவரத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஐபிஎல் வெற்றித் தொகை மட்டுமின்றி (IPL prize money ) ஒளிபரப்பு உரிமைகள் ,விளம்பரதாரர்கள், டிக்கெட் விற்பனை மூலமாகவும் அணிகளுக்கு வருமான பங்கு இருப்பதாக கூறப்படுவதால் கூடுதல் பரிசுத்தொகை பற்றி கருத்துகள் வலம் வருகிறது.கடந்த ஆண்டில் கோப்பையை வென்ற அணிக்கு அளிக்கப்பட்ட ரூ.20 கோடி பரிசுத்தொகையை விட கூடுதலாக இருக்குமா அல்லது இதே பரிசுத்தொகை இந்த சீசனிலும் தொடருமா என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.