IPL தொடரிலிருந்து வெளியேறுகிறது மும்பை அணி!

Mumbai Indians
Mumbai Indians

நடப்பு IPl தொடரில் அனைத்து அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்ற மும்பை அணி முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறுகிறது. இதனால், மும்பை அணி ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியாக உள்ளது.

நேற்று லக்னோ அணிக்கும் ஹைத்ராபாத் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் ஹைத்ராபாத் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி முதல் ஆறு ஓவர்களில் வெறும் 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், லக்னோ அணி சற்று தடுமாறியே வந்தது. இருப்பினும், 20 ஓவர்கள் முடிவில் 165 ரன்கள் எடுத்து 166 என்ற இலக்கை நிர்ணயித்தது.

இதுவரை, ஹைத்ராபாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் வெறித்தனமாக விளையாடி வரும் நிலையில், 166 என்ற இலக்கை வெறும் 9.4 ஓவர்களிலேயே முடித்தது. இது ஒரு நல்ல இலக்குதான் என்று லக்னோ அணி ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்த நிலையில், சற்றும் எதிர்பாரா விதமாக அந்த நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்தது ஹைத்ராபாத் அணி.

அபிஷேக் ஷர்மா மற்றும் ஹெட் ஆகியோர் இணைந்தே “இதெல்லாம் ஒரு ரன்னாடா” என்று எளிதாக இலக்கை அடைந்துவிட்டனர். அதாவது, அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து கடைசி வரை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல், ஹெட் 30 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஹைத்ராபாத் அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்றது. அதேபோல் லக்னோ அணி 12 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.

ஹைத்ராபாத் அணியின் இந்த வெற்றி, லக்னோ அணி ரசிகர்களை தாக்கியதோ இல்லையோ, மும்பை அணி ரசிகர்களை ஆழமாக தாக்கியது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், ஹைத்ராபாத் அணியால், மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு வந்துள்ளது. அதேபோல், நடப்பு ஐபிஎல் தொடரில் முதலாவதாக வெளியேறும் அணியாக மும்பை அணி உள்ளது. ஆம்! ஐந்து முறை சாம்பியன் வென்ற மும்பை அணி, முதல் அணியாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுகிறது.

இதையும் படியுங்கள்:
SRH Vs LSG: சமபல அணிகள் மோதல்… 7வது வெற்றி யாருக்கு?
Mumbai Indians

மும்பை அணியை பொறுத்தவரை பும்ரா மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதுவரை 18 விக்கெட்டுகளை வீழ்த்தி Purple Cap-பை கைப்பற்றவுள்ளார். ஆனால், இனி வரும் போட்டிகளில் மற்ற அணியில் உள்ள வீரர்கள் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்தால், பர்ப்பில் கேப் கைமாற வாய்ப்புள்ளது.

இதனால், மும்பை அணி வீரர்கள் தங்களது கடும் அதிருப்தியினை வெளிபடுத்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com