

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட மறுப்பு தெரிவித்த நிலையில் பாகிஸ்தானை சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து மொத்தமாக தடை செய்ய ஐ.சி.சி ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.
வங்காளதேச அணி, இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை இலங்கைக்கு மாற்றும்படி வலியுறுத்திய நிலையில் அவர்களின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.)ஏற்க மறுத்து விட்டது. இந்திய மண்ணில் உலகக் கோப்பையில் ஆடமாட்டோம் என்று விடாமல் முரண்டு பிடித்த வங்காளதேசத்தை உலகக் கோப்பை போட்டியில் இருந்து ஐ.சி.சி. நீக்கியது. அந்த அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வங்காளதேசத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்டை நாடான பாகிஸ்தானும் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தது. அதாவது இலங்கையில் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்தது.
புறக்கணிப்பதாக எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் அவ்வாறு போட்டியில் இருந்து விலகினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஐ.சி.சி. எச்சரித்தது. மேலும்பாகிஸ்தானை சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து மொத்தமாக தடை விதிக்கவும் பாகிஸ்தானின் அணியின் நிதி ஆதாரங்களை முடக்கவும் ஐ.சி.சி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அரசு மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன முடிவெடுக்கிறதோ அதை வீரர்கள் பின்பற்றுவார்கள் என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா தெரிவித்துள்ளார்.
இதனிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் முடிவு குறித்து முன்னாள் கேப்டனும், உலகப் புகழ் பெற்ற ஆல்ரவுண்டருமான ஷாஹித் அப்ரிடி எக்ஸ் தளத்தில், இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடாது என்பது வருந்ததக்கது. இருப்பினும், எனது அரசாங்கத்தின் முடிவை நான் ஆதரிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த உலகக் கோப்பையில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, அமெரிக்கா, நமிபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கை மண்ணில் நடக்கிறது.
இதில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் இடையே வரும் 15-ம் தேதி கொழும்பில் நடக்க இருந்த ஆட்டம் தான் கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக இருந்தது. தற்போது பாகிஸ்தான் பின்வாங்கி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதனால் ஒளிபரப்பு நிறுவனம் மற்றும் ஐ.சி.சிக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்படும்.
பாகிஸ்தான் அணி ஆடாவிட்டால் அந்த ஆட்டத்திற்குரிய புள்ளி இந்தியாவுக்கு வழங்கப்படும். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அபராதமும் ஐ.சி.சி. விதிக்கும் என்று தெரிகிறது.
ஒரு வேளை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நாக்-அவுட் சுற்றில் மோத வேண்டி இருந்தால், அப்போது பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னாவாக இருக்கும் என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை.
இந்தியா- பாகிஸ்தான் அணிகள் 2012-13 ஆண்டுக்கு பிறகு இரு நாட்டு நேரடி தொடரில் விளையாடுவதில்லை. இருப்பினும் இவ்விரு அணிகள் மோதும் போட்டிக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு இருப்பதால், 2012-ம் ஆண்டில் இருந்து ஐ.சி.சி. போட்டிகளில் ஒரே குரூப்பில் இடம் பெறும் வகையில் ஐ.சி.சி. பார்த்துக் கொள்கிறது. இந்த முறையும் அவ்வாறு தான் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீர் திருப்பமாக பாகிஸ்தான் ஜகா வாங்கியிருக்கிறது.