மக்கள் என்னை மறந்து மறந்து போகிறார்கள், இன்னும் என்னதான் நான் செய்ய வேண்டும் என்று கே.எல்.ராகுல் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய அணி ஏ பிரிவில் முதலிடம் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதற்கு முன்னர் வங்காளதேசத்தையும், பாகிஸ்தானையும் தோற்கடித்துவிட்டது. இந்தநிலையில் நியூசிலாந்து அணியுடன் மோதிய ஆட்டத்தில், இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்றது. அதாவது இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறி எதிரணி 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார். இதனையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் மோதியது. இதில் இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்று இறுதிசுற்றுக்கு முன்னேறியது.
அந்தவகையில் இந்திய அணியின் முக்கிய வீரர்களுள் ஒருவரான கே.எல்.ராகுல் இந்திய அணி குறித்து பேசியிருக்கிறார்.
“உண்மையை சொல்லப்போனால் இந்திய அணியில் நான் 2020ம் ஆண்டிலிருந்து ஐந்தாவது பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறேன். ஆனால், நான் பேட்டிங் செய்கிறேன் என்பதையே மக்கள் அடிக்கடி மறக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் நான் ஒரு நாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பிறகு, மீண்டும் ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்கு நான்கு முதல் ஐந்து மாதங்கள் ஆகிறது. ஐந்து மாதங்கள் கழித்து திரும்பி வரும்போது நான் பிளேயிங் லெவன் அணியில் விளையாடுகிறேனா? அப்படி விளையாடினால் எந்த இடத்திற்கு நான் பொருந்துவேன் என்று கேள்விகள் எழுகிறது.
நான் இன்னும் என்னெல்லாம் செய்ய வேண்டும் என்பதை யோசிக்கிறேன். என்னை விளையாட சொன்ன அனைத்து இடங்களிலும் விளையாடி என் பங்கை அளித்திருக்கிறேன். ரோஹித் ஐந்து ஆண்டுகளாக கேப்டனாக இருக்கிறார். அவர் என்ன சொன்னாலும் நான் அதை சிறப்பாக செய்கிறேன் என்று உணர்கிறேன். ஒரு கேப்டனாக ரோகித் சர்மா எப்போதும் எனக்கு ஆதரவளித்துள்ளார்.” என்று பேசியிருக்கிறார்.
கே.எல்.ராகுல் பல சர்ச்சைகளை தாண்டி இன்னும் இந்திய அணியில் ஜொலிக்கும் ஒரு வீரர். இன்றும் அவர் தனது முழு பங்களிப்பையும் கொடுத்து வருகிறார்.