22 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற சாம்பியன் ரஃபேல் நடால் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் போட்டியில் காலிறுதியில் தோல்வி அடைந்த அவர், தசைநார் கிழிந்ததை அடுத்து இந்த முடிவை எடுத்ததாக கூறினார். ஸ்பெயினுக்கு சென்று ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் விளையாட்டுக்கு திரும்ப இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்தவாரம் பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் போட்டியின் காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்ஸனிடம் ரஃபேல் நடால் தோல்வி அடைந்தார். சுமார் மூன்றரை மணி நேரம் நடந்த போட்டி அவருக்கு கடுமையாகவே இருந்தது.
தசைப்பிடிப்பு காரணமாக பிரிஸ்பேன் போட்டியில் நான் சரியாக விளையாடவில்லை. எனது உடல்நிலை சரியில்லாத நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் விளையாடுவது சந்தேகமே என்று ரஃபேல் நடால் கூறிவந்தார். இப்போது அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மெல்போர்னில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்தபோது தசைநார் கிழிந்திருப்பது தெரியவந்தது. எனவே ஆஸ்திரேலிய ஓபனில் ஐந்து செட்டு போட்டிகளில் விளையாடுவது சிரமம் என தெரியவந்தது. உடனடியாக ஸ்பெயின் சென்று எனது குடும்ப டாக்டரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற இருக்கிறேன் என்று நடால் தெரிவித்துள்ளார்.
2023 ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் இரண்டாவது சுற்றில் வெளியேறிய ரஃபேல் நடால் இடுப்பில் ஏற்பட்ட தசைப்பிடிப்புக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் எந்த போட்டியிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார்.
வருகிற 14 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு முன்னதான பிரிஸ்பேன் இன்டர் நேஷனல் போட்டியில் பங்கேற்ற ரஃபேல் நடால், நீண்டநாள் நண்பர் மார்க் லோபஸுடன் இரட்டையர் போட்டியில் பங்கேற்று முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தார். அடுத்து ஒற்றையர் போட்டியில் முதல் இரண்டு சுற்றுக்களை வென்ற நடால், காலிறுதியில் ஜோர்டான் தாம்ஸனிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.
ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், தசைநார் கிழிந்ததால் அது முடியாமல் போனது. எனினும் நான் விளையாடாதது ஒன்றும் மோசமான செய்தி அல்ல. ரசிகர்கள் மனம் உடைந்து போக வேண்டாம். அவர்களின் ஆதரவுக்கு நன்றி என்று ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை நடால் தவறவிட்டாலும் அவர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து பிரெஞ்ச் ஓபன் போட்டியில் பங்கேற்க போதுமான அவகாசம் உள்ளது. பிரெஞ்ச் ஓபன் போட்டியில் இதுவரை 14 முறை பட்டம் வென்றுள்ளார்.
2024 ஆம் ஆண்டு தொழில்முறை ஆட்டத்தில் எனது கடைசி ஆண்டாக இருக்கும் என்று முன்பு ரஃபேல் நடால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.