2024 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் வீர்ர்களை அணி உரிமையாளர்கள் ஏலம் எடுக்கவிருக்கும் நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பந்த துபாய் சென்றுள்ளார். அவர் இந்த சீசனில் போட்டியில் பங்கேற்கலாம் என்று சொல்லப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த், கடும் சிகிச்சைக்குப் பின் மீண்டுவந்துள்ளார். இந்த விபத்தின் விளைவாக அவரது வலது முழங்காலில் உள்ள மூன்று முக்கிய தசைநார்கள் கிழிந்தது. இதனால் சிகிச்சை பெற்றுவந்த அவர் 2023 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
எனினும் பல்வேறு அறுவைச்சிகிச்சைகளுக்குப்பின் குணமடைந்த அவர், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் தீவிர மறுவாழ்வுத் திட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பயிற்சி பெற்றார்.
அவர் எந்தவித சலனமும் இல்லாமல் அர்ப்பணிப்புடன் சிகிச்சை பெற்றதால் இப்போது மீண்டு எழுந்துள்ளார். அவ்வப்போது தனது உடல்நிலை பற்றிய தகவல்களை ரசிகர்களுக்கும் தன்னை பின்தொடர்பவர்களுக்கும் அளித்து வந்தார். அவர் உடல்நிலை நன்கு தேறிவருகிறது. அவர் நிச்சயம் கிரிக்கெட் விளையாட்டுக்கு திரும்பி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குநர்களில் ஒருவரான செளரவ் கங்குலி கூறியிருந்தார். இன்னும் சொல்லப்போனால் 2024 ஆம் ஆண்டு ஐ.பி.எல். சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தலைமையேற்று வழிநடத்துவார் என்றுகூட அவர் கூறியிருந்தார்.
தற்போது துபாய் வந்துள்ள ரிஷப் பந்த், அணி ஏலத்துக்கு தயாராக இருக்கிறார். விக்கெட் கீப்பரான பந்த், தமது அணிக்கான சிறந்த வீர்ர்களைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"நான் ஏன் எலத்திற்கு வந்தேன் என்றால், உங்களுக்குத் தெரியும், சில சமயங்களில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட வீர்ர் அணியில் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள். என்னால் அதைச் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். அணிக்கு சிறந்த வீர்ர்கள் கிடைத்தால் அதுவே மிகப்பெரிய பலமாக இருக்கும்" என்றார் ரிஷப் பந்த்.
டெல்லி கேபிடல்ஸ் ஏலத்தில் இடம்பெற அதனிடம் ரூ.28.95 கோடி கையிருப்பு உள்ளது. ஏலத்துக்கு முன்பாகவே 11 வீர்ர்களின் பெயரை அறிவித்துவிட்டது. அவர்களுக்கு மொத்தம் 9 இடங்கள் உள்ளன. அவர்களில் நான்கு பேர் வெளிநாட்டினர்.
அணி விவரம்: ரிஷப் பந்த், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, பிருத்வி ஷா, கலீல் அகமது, லலித் யாதவ், பிரவீன் துபே, முகேஷ்குமார், யாஷ் துல், விக்கி ஆஸ்ட்வால் மற்றும் அபிஷேக் போரல்.
வெளிநாட்டு வீர்ர்கள்: டேவிட் வார்னர், மிட்சல் மார்ஷ், அன்ரிச் நோர்ட்ஜி, லுங்கி நகிடி.