

இந்த கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி ஆட்டக்காரருமான ரிஷப் பண்ட் , தற்போது புதிய சாதனை ஒன்றைப் படைக்க தயாராக உள்ளார். இலங்கை செல்லவுள்ள இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள ரிஷப் பண்டிற்கு ஒரு சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் செய்ய உள்ள சாதனையின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தோனி செய்யாத சாதனையை செய்து முடிப்பார். அதனால், இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கல்லே சர்வதேச மைதானத்தில் தொடங்க உள்ளது. இங்கிலாந்து மண்ணில் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய ரிஷப் பண்ட், குறுகிய காலத்திலேயே தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் அணியில் முக்கிய இடம் பிடித்தார்.
ரிஷப் இதுவரை விளையாடியுள்ள 50 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 97 சிக்சர்களை விளாசியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.நடைபெற உள்ள இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இன்னும் 3 சிக்ஸர்கள் அடித்தால் , டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை தன் வசப்படுத்தலாம்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் , முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் 90 சிக்சர்களுடன் 2வது இடத்திலும், தற்போதைய இந்திய அணியின் உள்ள ரோஹித் சர்மா 88 சிக்சர்களுடன் 3 வது இடத்திலும் உள்ளனர்.
சர்வதேச அளவில், இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்சர்களை அடித்துள்ள வீரர்களின் பட்டியல் முதலிடத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்(138 சிக்சர்கள்) இருக்கிறார். இரண்டாவது இடத்தில் நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் (107 சிக்சர்கள்) மற்றும் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் (100 சிக்சர்கள்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் கட்டாயமாக 3 சிக்சர்களை அடித்தால் அவர் சாதனை வீரராக மாறலாம். அதன் மூலம் சர்வதேச அளவில் 4-வது வீரராகவும் , கூடுதலாக இன்னும் ஒரு சிக்ஸர் அடித்தால் 3-வது வீரர் என்ற பெருமையை பெறலாம்.
இது மட்டுமில்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வேறு சில சாதனைகளையும் ரிஷப் செய்துள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இதுவரை 40 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2,780 ரன்களைக் குவித்துள்ளார். இன்னும் 220 ரன்கள் எடுத்தால், இந்தத் தொடரின் 3,000 ரன்களைக் கடந்த முதல் விக்கெட் கீப்பர் என்ற
சாதனையும் அவர் வசம் வரும்.இந்த சாதனை மட்டுமல்லாமல் இன்னொரு சாதனையும் ரிஷப் நெருங்கி வருகிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 77 சிக்சர்களை அடித்துள்ள அவர், இன்னும் 12 சிக்சர்கள் அடித்தால் பென் ஸ்டோக்ஸின் 88 சிக்சர்கள் சாதனையை முறியடித்து முதலிடம் பெற முடியும்.