இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த போட்டியில் அறிமுகமான இந்திய வீரர் சர்பராஸுக்கு சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே அறிமுக தொப்பியை வழங்கினார். இந்த நிகழ்வைப் பார்த்த சர்பராஸின் தந்தை, கண்ணீர் விட்டு அழுத காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Under 19 போட்டியிலிருந்தே தனது திறமை மிகுந்த ஆட்டத்தால் மும்பை அணியில் தொடர்ந்து சிறப்பான இடத்தில் இருந்து வந்தார். அதன்பின் அண்டர் 19 தொடரில் முன்னேறி, பிறகு ரஞ்சி ட்ராபி வரை முன்னேறினார். இந்த ரஞ்சி ட்ராபியில் தொடர்ந்து நல்ல ரன்களை எடுத்து வந்த இவர் 69 சராசரி எடுத்து உள்ளூர் வீரர்களில் முதன்மையாக இருந்து வந்தார். ஆனால் எதோ ஒரு காரணமாக இந்திய அணியில் சர்வதேச போட்டிகளில் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படாமலே இருந்தார்.
இந்நிலையில் இங்கிலாந்து இந்தியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல், விராட் கோலி போன்றோர் இல்லாத நிலையில், பேட்டிங் வரிசையில் வீரர்கள் இல்லாமல் குறைப்பாடாக இருந்தது. இதனால் சர்பராஸிற்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் டெஸ்ட் ஜாம்பவான் என்றழைக்கப்படும் அனில் கும்ப்ளே கையால் தனது டெஸ்ட் அறிமுக ஆட்டத்திற்கான தொப்பியை சர்பராஸ் வாங்கி அணிந்துக்கொண்டார்.
சர்பராஸின் இந்த வளர்ச்சிக்கு மிகவும் துணைப் புரிந்தவர் அவரது தந்தை நௌஷத் கான் தான். நௌஷத் கான் ஒரு கிரிக்கெட் பயிற்சியாளர் என்பதால், தன் மகனை எப்படியாவது ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் ஆக்கிவிட வேண்டுமென்று சர்பராஸின் சிறு வயதிலிருந்தே நௌஷித் போராடி வருகிறார். கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக ரஞ்சி ட்ராபியில் மட்டுமே விளையாடி வந்த சர்பராஸுக்கு ஒருவழியாக இப்போது இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.
சர்பராஸுக்கு கும்ப்ளே தொப்பி கொடுக்கும்போது அவரின் தந்தை கண்ணீர் விட்டு அழுதார். சர்பராஸ் தந்தையிடம் வந்து அந்தத் தொப்பியை கொடுத்தார். அதனை கையில் ஏந்தி முத்தம் கொடுத்து மீண்டும் கண்ணீர் விட்டு அழுது சர்பராஸை கட்டிப்பிடித்த காட்சி பார்ப்பவர்களை உருகச்செய்தது. அவரின் கண்ணீரே அவர்களின் போராட்டத்தைப் பற்றி அனைவருக்கும் எடுத்துரைத்துவிட்டது.