முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கங்குலி, டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஓப்பனராகக் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பைத் தொடங்குகிறது. 20 அணிகள் பங்குபெறும் இந்த உலகக்கோப்பைத் தொடரில், இந்திய அணியின் வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முன்னாள் வீரர்கள் பலர் எந்த வீரர்களையெல்லாம் தேர்ந்தெடுக்கலாம் என்று ஆலோசனை கூறி வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சௌரவ் கங்குலி டெல்லி அணியின் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
அதாவது, “விராட் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர்தான் டி20 உலகக்கோப்பையில் ஓப்பனர்களாகக் களமிறங்குவார்கள் என்று நினைக்கிறேன். இந்த முறை அனுபவத்திற்கும், இளம் வீரர்களின் திறமைக்கும் இடையே பெரிய போட்டி நடக்கும். ஒவ்வொரு வீரர்களின் தனிப்பட்ட திறமை, வயது, அனுபவம், செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இந்திய அணியின் வீரர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்தியாவின் பேட்டிங் லைனப் சிறப்பாக இருக்க வேண்டும். ஏனெனில், முதலில் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தால் கூட, கடைசி வரை சமாளிக்கலாம்.
விராட் கோலிக்கு 40 பந்துகளில் 100 (200 ஸ்ட்ரைக் ரேட்) அடிக்கும் திறன் உள்ளது. அதேபோல் ரோஹித் ஷர்மா 50 ஓவர்கள் கொண்ட உலகக்கோப்பை போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆகையால், இந்த இரண்டு வீரர்கள் உட்பட மற்ற இந்திய வீரர்களுமே எதிரணிக்கு முதலிலிருந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். முதலில் நன்றாகத் தொடங்கினால், இரண்டாவது இன்னிங்ஸில் அழுத்தம் இல்லாமல் விளையாட முடியும்.” இவ்வாறு சௌரவ் கங்குலி பேசினார்.
கடந்த பிப்ரவரி மாதம் ரோஹித் ஷர்மா டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விராட் கோலி விளையாடுவாரா என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்தன. இதனையடுத்து அவரும் விளையாடுவார் என்று பிசிசிஐ தேர்வு குழு ஆணையத்திலிருந்து செய்திகள் கசிந்தன. இந்தநிலையில் இந்த மாதம் கடைசியில் டி20 உலகக்கோப்பையில் விளையாடப்போகும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.