
இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன் எம்எஸ் தோனி. உலக கிரிக்கெட்டில் ஐசிசி நடத்தும் மூன்று விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் இவர் தான். 2007 இல் டி20 உலகக்கோப்பை, 2011 இல் ஒருநாள் உலகககோப்பை மற்றும் 2013 இல் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று கோப்பைகளை இந்தியாவிற்கு வென்று கொடுத்தவர் தோனி. 'கேப்டன் கூல்' என அழைக்கப்படும் தோனி, இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்கியதை நாம் பார்த்திருக்கிறோம். அதில் ஒரு இளம் வீரர் பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்திருக்கிறார். யார் அந்த வீரர்? அவருக்கு தோனி வழங்கிய அறிவுரை என்ன? பார்ப்போம்.....
ஐசிசி தொடர்களுக்குப் பிறகு உலகளவில் பிரசித்தி பெற்ற கிரிக்கெட் தொடராக ஐபிஎல் மாறியுள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இத்தொடரில் ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதுதவிர வெளிநாட்டு வீரர்களும் இத்தொடரில் கலக்குகிறார்கள். ஐபிஎல் தொடரில் பல மூத்த வீரர்கள் இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்குவது வழக்கம். அவ்வகையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது அணி வீரர்கள் உள்பட மற்ற அணி வீரர்களுக்கும் அறிவுரை வழங்குவார்.
தோனியின் அறிவுரைப்படி செயல்பட்டு, இன்று கிரிக்கெட்டில் தனக்கென தனியிடத்தைப் பிடித்த இளம் வீரர்கள் ஏராளம். இலங்கை அணியில் இன்று பதிரனா இடம் பிடிப்பதற்கு முக்கிய காரணம், ஐபிஎல் தொடரில் அவரை தோனி வழிநடத்திய விதம்தான்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடி கலக்கியவர் ஷஷாங்க் சிங். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் களத்திற்கு வந்த ஷஷாங்க், இன்று பஞ்சாப் அணி தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்கு நம்பிக்கையையும், எதிர்ப்பார்ப்பையும் கொடுத்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணமே இவரது நேர்த்தியான ஆட்டம் தான். கடைசி வரை அதிரடியாக விளையாடி, கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்கு சில வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார் ஷஷாங்க்.
தனது ஆட்டத் திறன் மேம்பட்டதற்கு தோனி வழங்கிய அறிவுரை தான் காரணம் என சமீபத்தில் தெரிவித்தார் ஷஷாங்க். ஒருமுறை மகேந்திர சிங் தோனியை சந்தித்த ஷஷாங்க், சிறந்த ஃபினிஷராக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த தோனி, “நீ விளையாடும் 10 போட்டிகளில் குறைந்தபட்சம் 3 போட்டிகளில் உனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றால் போதும். உலக கிரிக்கெட்டில் மிகச் சிறந்த 5 அல்லது 10 வீரர்களில், நிச்சயமாக நீயும் ஒருவராக இருப்பாய்” என்று கூறினார்.
தோனியின் அறிவுரை தான் ஷஷாங்க் சிங்கிற்கு உத்வேகத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரித்துள்ளது. அதனை ஏற்று பயிற்சி செய்த ஷஷாங்க், களத்தில் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக விளையாடி பலரது கவனத்தையும் ஈர்த்தார். பலரும், 'யார் இந்த ஷஷாங்க்! அருமையாக விளையாடுகிறார்' என்று சொல்லும் அளவிற்கு தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2024 ஐபிஎல் தொடரில் 164.65 ஸ்டிரைக் ரேட்டில் 44.25 சராசரியுடன், 354 ரன்களைக் குவித்தார் ஷஷாங்க் சிங்.