'தல' தோனியின் கடைசி ஆட்டம்: 2026 ஐபிஎல் கோப்பையுடன் விடைபெறுவாரா? எகிறும் எதிர்பார்ப்பு!

M.s Dhoni
M.s Dhoni
Published on

ஒவ்வொரு ஐபிஎல் சீசன் தொடங்கும்போதும், ரசிகர்களின் மனதில் இருக்கும் ஒரே கேள்வி, "இதுதான் தோனியின் கடைசி சீசனா?" என்பதுதான். 2026 ஐபிஎல் தொடரும் இதற்கு விதிவிலக்கல்ல. 40 வயதைக் கடந்தாலும், களத்தில் அவர் காட்டும் வேகம் குறையவில்லை. ஆனால், இந்த முறை நிலைமை சற்று வித்தியாசமாக இருக்கிறது. 

முக்கிய வீரர்கள் அணியை விட்டு வெளியேறியது, புதிய வீரர்களின் வரவு, மற்றும் கடந்த சீசன்களில் சந்தித்த சறுக்கல்கள் என சிஎஸ்கே அணி ஒரு பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. இந்த சூழலில், தோனியின் ஓய்வு முடிவு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஜடேஜாவின் வெளியேற்றம்!

சிஎஸ்கே அணியின் தூணாக இருந்த ரவீந்திர ஜடேஜா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குச் சென்றது ரசிகர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சிதான். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என ஆல்ரவுண்டராகக் கலக்கியவர் அவர். ஆனால், கடந்த சில சீசன்களாக அவரது பேட்டிங் மற்றும் பவுலிங் ஃபார்ம் பெரிய அளவில் இல்லை என்ற விமர்சனமும் இருந்தது. 

அவருக்குப் பதிலாக அணிக்கு வந்திருப்பவர் சஞ்சு சாம்சன். ஒரு சிறந்த விக்கெட் கீப்பர், கேப்டன்சி அனுபவம் உள்ளவர், எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்பின் பவுலிங்கை வெளுத்து வாங்கும் திறமை கொண்டவர். சேப்பாக்கம் மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமானது என்பதால், சஞ்சுவின் வரவு சிஎஸ்கேவுக்கு ஒரு புது தெம்பைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இளைய பட்டாளம்!

ஒரு காலத்தில் சிஎஸ்கேவை "டாடி ஆர்மி" (Daddy Army) என்று கிண்டல் செய்தார்கள். ஆனால், இன்று நிலைமை தலைகீழ். 90% அணியில் இருப்பது இளம் வீரர்கள் தான். ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, கலீல் அஹமது, நூர் அஹமது போன்ற பழைய முகங்களோடு, பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் ஷர்மா போன்ற இளம் வீரர்களை நம்பி சிஎஸ்கே நிர்வாகம் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளது. தோனி தலைமையிலான இந்த இளம் படை, நிச்சயம் ஒரு பெரிய சம்பவத்தைச் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

தோனியின் ஓய்வு?

2020-லேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல்-ல் மட்டும் ஏன் தொடர்ந்து விளையாடுகிறார்? காரணம், சிஎஸ்கே ரசிகர்கள் மீது அவர் வைத்திருக்கும் பாசம் தான். ஆனால், 2024 மற்றும் 2025 சீசன்களில் சிஎஸ்கே கோப்பையை வெல்ல முடியாதது அவருக்கு ஒரு வருத்தமாக இருக்கலாம். ஆர்சிபி போன்ற அணிகள் கூட சிஎஸ்கேவை வீழ்த்திவிட்டன.

இதையும் படியுங்கள்:
அஜித் வழியில் ‘தோனி’..? கிரிக்கெட்டை தாண்டி சாதனை..!
M.s Dhoni

தோனி ஓய்வு பெற இரண்டு காரணங்கள் இருக்கலாம்: ஒன்று, 2026-ல் சிஎஸ்கே ஆறாவது முறையாகக் கோப்பையை வென்று, ஒரு சாம்பியனாக அவர் விடைபெறுவது. அல்லது, அவரது உடல்நிலை ஒத்துழைக்காமல் போவது. எது நடந்தாலும், தோனியின் முடிவு எப்போதும் அமைதியாக, ஆனால் அதிரடியாகவே இருக்கும்.

கிரிக்கெட் வரலாற்றில் தோனி போன்ற ஒரு கேப்டனைப் பார்ப்பது அரிது. அவர் களத்தில் இருக்கும் வரை, ஆட்டம் முடிந்துவிட்டது என்று யாராலும் சொல்ல முடியாது. 2026 ஐபிஎல் தொடர் அவருக்குக் கடைசித் தொடராக அமையலாம். ஆனால், அவர் கோப்பையுடன் விடைபெற வேண்டும் என்பதே கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆசை. 

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் மேடையில் தோனி.! சர்வதேச அரங்கில் கோலி.!
M.s Dhoni

எது எப்படியோ, "தல" தோனி களத்தில் இறங்கினாலே அது ஒரு திருவிழாதான். அந்தத் திருவிழாவைக் கொண்டாட நாமும் தயாராவோம்! Whistle Podu!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com