

குதிரைகள் வேகமாக ஓடும் அழகே தனி; அதுவும் பந்தய மைதானத்தில் குதிரைகள் சீறிப்பாய்வதைக் காண்பது பரவசமான அனுபவம்.ரேஸில் தாவி ஒன்றுடன் ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு பறந்து இலக்கை நெருங்கும் ( photo finish ) குதிரைகள் பார்ப்பவர்களை ஆட்டிப் படைக்கும் குறிப்பாக அந்த அந்த குதிரை மீது பணம் கட்டியவர்கள் இந்த உலகிலேயே இருக்க மாட்டார்கள்.
உலகம் எங்கும் குதிரை பந்தய மைதானங்களில் பந்தய நேரங்களில் ரசிகர்கள், பணம் கட்டியவர்கள் எல்லோரையும் கட்டிப் போடும் நிகழ்வு இன்றும் நடைப் பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது.
பொதுவாக வார இறுதி நாட்களில் விடுமுறைகள் இருக்கும் சமயத்தில் குதிரை பந்தயங்கள் நடைப் பெறுவது சகஜம்.ஆனால் இந்த நாட்டில் மட்டும் ஒரு பகுதியில் வருடா வருடம் ஒரு குறிப்பிட்ட வார தினத்தில் நடைப் பெறும் குறிப்பிட்ட பந்தயத்திற்கு மட்டும் தனி மவுசு.
அந்த பந்தயத்திற்காக அன்றைய தினம் அந்த மாகாணத்தில் பொது விடுமுறை விடப்படுகின்றது அந்த குதிரை பந்தயத்தை நேரில் கண்டு களித்து மகிழ்ந்து கொண்டாட.இந்த நிகழ்வு வருடா வருடம் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பகுதியில் நடைபெறும் புகழ் பெற்ற மெல்போர்ன் கோப்பை குதிரை பந்தயத்திற்காக.இந்த பந்தயம் பிளெமிங்க்டோன் ரேஸ் கோர்ஸ்சில் நடை பெறும்.
1861 ல் எளிய முறையில் துவங்கப் பட்ட இந்த பந்தயம் நூற்றாண்டுகள் கடந்து தற்பொழுது விஸ்வரூபம் எடுத்து பெரும் ஆதரவுடன் நடைப் பெருகின்றது.
பல ஆயிரக் கணக்கானவர்கள் பந்தயம் நடை பெறும் பந்தய மைதானத்தில் கூடுவார்கள் நேரில் கண்டு களிக்க. உலகம் எங்கும் பல லட்சக்கணக்கான பார்வையாளர்கள் இந்த பந்தயத்தை காண தவறுவதில்லை.
ஆரம்பத்தில் விக்டோரியன் தூர்ப் கிளப் ( Victorian Turf Club ) அவர்களால் நடத்தப்பட்டு வந்தது இந்த மெல்போர்ன் கோப்பை குதிரை பந்தயம்.அந்த ஆரம்ப கால கட்டத்தில் பங்கு பெற்ற குதிரைகள் ஓட வேண்டியிருந்த தூரம் இரண்டு மைல்கள். குறிப்பாக நீண்ட தூரம் ஓடும் குதிரைகளின் சகிப்பு தன்மையை சோதித்து பார்க்க இவ்வளவு தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
காலப் போக்கில் படிப் படியாக குறைக்கப் பட்டு இப்பொழுது கடக்க வேண்டிய தூரம் 3200 மீட்டர்கள் ஆகும்.1873 ல் இந்த கோப்பைகான பொது விடுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
துவக்கத்தில் வேல்ஸ் இளவரசரின் பிறந்த நாள் அன்று இந்த பந்தயமும் நடை பெற வேண்டும் என்றும் அதனால் அன்று பொது விடுமுறை அளிக்கவும் திட்டம் இருந்தது. இது சர்ச்சையை சந்தித்து 1875 ல் நவம்பர் மாதம் இரண்டாவது செவ்வாய் கிழமை பொது விடுமுறை முடிவாகி இந்த பந்தயம் நடைப் பெற்றது.
1876 ல் விக்டோரியான் ரேசிங் கிளப் வேண்டுதலின் படி மெல்போர்ன் கோப்பை தினம் ( Melbourne Cup Day ) செவ்வாய் கிழமை அன்று நடைப் பெற வேண்டும் என்று முடிவாகி புகழ் அடைய துவங்கியது.
1993 முதல் விக்டோரியாவில் நடைப் பெறும் இந்த பந்தய நாள் பொது விடுமுறை என்று அரசாங்கம் அதிகார பூர்வமாக அறிவித்தது.
ஒவ்வொரு வருடத்தின் நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய் கிழமை அன்று இந்த
மெல்போர்ன் கோப்பைக்கான குதிரை பந்தயம் நடைப் பெறும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
அன்றைய தினம் விடோரியாவில் வசிப்பவர்கள் " இந்த ரேஸ் தேசம் செயல்படுவதை நிறுத்தி வைகின்றது "என்று வேடிக்கையாக கூறிக் கொள்வது வழக்கம் ஆகி விட்டது. அங்குள்ளவர்கள் ரேசை நேசிப்பதுடன் புகழும் அதிகரித்து வருகின்றது.பாதுகாப்பு கருதி ரேஸில் 24 குதிரைகளையே அனுமதிக்கப் படுகின்றன.
மொத்த பரிசு தொகை கடந்த ஆண்டு 10 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள். 1.69 கிலோ கிராம் எடை கொண்டது இந்த புகழ் பெற்ற மெல்போர்ன் குதிரை பந்தயத்தின் வெற்றி கோப்பை 18 காராட் தங்க கோப்பை ஆகும்.