உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்றிருக்கிறார் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ். இவரின் வெற்றிக்கு காரணமானவர்களையும் தெரிந்துக்கொள்ள வேண்டுமல்லவா?
தன்னுடைய ஒரே கனவு உலக சாம்பியன் பட்டம் வெல்வதுதான் என்று ஒரு குட்டி பையன் அன்று சொன்ன வார்த்தைகள் அப்போது யாருக்கும் தெரியவில்லை. ஆனால், இன்று அவனுடைய வெற்றி உலகம் முழுவதும் கர்ஜித்திருக்கிறது. அவர்தான் உலக செஸ் சாம்பியன் குகேஷ். விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு இரண்டாவது முறை இந்தியாவிற்கு செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுக் கொடுத்தவர் இவர். மிகவும் இளம்வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர். அந்தவகையில் அவரின் கனவுகளுக்கு உரமாக இருந்தவர்கள் பற்றிப் பார்ப்போம்.
குகேஷ் வாழ்வின் ஒரே கனவான உலக செஸ் சாம்பியன் பட்டத்தை அடைய அவர் மட்டுமல்ல அவரது பெற்றோரும் கனவின் சுமையை பகிர்ந்திருக்கின்றனர். 2017-18ம் ஆண்டு குகேஷ், கிராண்ட் மாஸ்டர் நார்ம் இறுதிக்கட்டத்தை எட்டும் நிலையில் இருந்ததால் உலகின் பல்வேறு பகுதியில் நடைபெற்ற செஸ் போட்டிகளில் பங்கேற்க வேண்டி இருந்தது.
அவர் ஒரு சிறுவர் என்பதால் துணை இல்லாமல் பல இடங்களுக்குப் பயணிக்க முடியாதல்லவா? அப்போது அவரது தந்தை ரஜினிகாந்த் பணிக்குப் போவதை நிறுத்துவிட்டு, தனது மகனுக்கு துணையாக நின்றார். இரண்டு கால்கள் நான்கு கால்களாக மாறி கனவுப் பாதையில் பயணிக்க தேவையான வலுவைப் பெற்றது.
தந்தை தனது பணியை விட்டுவிட்டதால், எப்படி சாப்பிடுவது, வாழ்வது? அந்த பொறுப்பை எடுத்துக்கொண்டார், குகேஷின் அம்மா. குகேஷ் அம்மா தனது மகனையும் கணவரையும் பார்ப்பதே கடினமாக அமைந்தது.
மூவரின் கடின உழைப்பிற்கும் ஒருநாள் ஒரு பலன் கிடைத்தது. ஆம்! குகேஷ் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் கிராண்ட் மாஸ்டர் ஆனார். அப்போது அவருக்கு பன்னிரெண்டு வயது. இதன் மூலம் அவர், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். ஆனால், இதன்பிறகுதான் அதிகளவு வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செல்வதற்கான சூழல் ஏற்பட்டது. இதனால் குகேஷின் பெற்றோர் தாங்கள் சேர்த்து வைத்த அனைத்து தொகைகளையும் செலவழிக்க அரம்பித்தனர்.
கையில் இருந்த கடைசி பணத்தையும் செலவழித்த பிறகு, என்ன செய்வதென்று அறியாமல், விஸ்வநாதன் ஆனந்த் அகாடமி வழியாக உதவியை நாடினார்கள். அவருக்கான உதவியும் அங்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்து குகேஷின் பயணம் ஏறுமுகமானது.
தனது குடும்பத்தின் அத்தனை கஷ்டங்களுக்கும் நடுவில் வளர்ந்து வந்த குகேஷுக்கு, இந்த உதவித்தொகையால் நிம்மதியும் கிட்டியது. இதனால் மற்ற எதுபற்றியும் நினைக்காமல், ஆட்டத்தில் மட்டும் முழு கவனம் செலுத்தினார்.
ஒருநாள் தனது கனவை அடையும் நேரமும் வந்தது. செஸ் போட்டியில் வெற்றி நமக்குத்தான் என்று தெரிந்த கனமே அழ ஆரம்பித்தார் குகேஷ். கடைசி காயை நகர்த்திவிட்டு செஸ் போர்டில் விழுந்து அழுத அந்த வீடியோவைப் பார்த்தால் யாருக்குத்தான் நெகிழ்ச்சி ஏற்படாது.
கனவு பலித்த நாளாக, பெற்றோரின் அத்தனை கஷ்டங்களுக்கும் பலன் தந்த நாளாக, ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமை அடையக்கூடிய நாளாக, உலக சாம்பியன் கோப்பையை இந்தியா இரண்டாவது முறையாக வென்ற நாளாக நேற்று அமைந்தது.
இத்தனை மகிழ்ச்சிக்கும் காரணமாக குகேஷ் விளங்கினார். ஆனால், அவரின் ஆனந்த கண்ணீருக்கும் வெற்றிக்கும் பின்னால் உள்ள ரகசியமாக பெற்றோர் விளங்கினார்கள்.
போட்டி முடிந்ததும் அழுதுக்கொண்டே சென்று தனது தந்தையை அணைத்த அந்தக் காட்சிதான் ரகசியம் உடைந்த தருணமாக விளங்கியது.
குடும்பத்தின் முழு ஒத்துழைப்பும் இருந்தால், ஒவ்வொரு மனிதனும் எட்டாத உயரத்திற்கு சென்று தனது வெற்றிக் கொடியை பறக்க விட முடியும் என்பதற்கு ஒரே சாட்சிதான் குகேஷ் மற்றும் அவரது பெற்றோர்.