ஜூலை 5-ல் டிஎன்பிஎல் கிரிக்கெட் திருவிழா!

TNPL Cricket
TNPL Cricket
Published on

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் சூழலில், அது முடிந்த உடனேயே தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் ஜூலை 5-ல் தொடங்கவிருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை இப்போது காண்போம்‌.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகளவில் பிரபலமான தொடர்களில் ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால் இது ஐசிசி தொடர்களுக்கு இணையாகவே பார்க்கப்படுகிறுது. ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது தான் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (TNPL). இந்தத் தொடர் தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் இத்தொடரின் 8-வது சீசன் வருகின்ற ஜூலை மாதம் 5 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி முடிவடையும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் வீரர்களின் பலரது கனவும் இந்திய அணியில் இடம் பிடிப்பது தான். ஆனால், போட்டி நிறைந்த கிரிக்கெட் உலகில் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இருப்பினும் கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க உருவாக்கப்பட்டது தான் ஐபிஎல் மற்றும் டிஎன்பில் போன்ற கிரிக்கெட் தொடர்கள். ஐபிஎல் தொடரில் கூட தமிழ்நாட்டு வீரர்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், இவர்களுக்கு வரப்பிரசாதமாய் வந்தது தான் தமிழ்நாடு ப்ரீமியர் லீக். இத்தொடரில் தமிழ்நாட்டு வீரர்கள் பலருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்திய அணி மற்றும் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் களமாய் கொண்டாடப்படுகிறது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர். இந்நிலையில் இத்தொடரின் 8வது சீசன் தொடங்க இருப்பது ரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி தான்.

டிஎன்பிஎல் தொடரின் 8வது சீசன் சென்னை, கோவை, சேலம், திண்டுக்கல் மற்றும் நெல்லை என மொத்தம் 5 இடங்களில் நடைபெற இருக்கிறது. ஜூலை 5 ஆம் தேதி சேலத்தில் நடைபெற இருக்கும் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொள்கிறது லைகா கோவை கிங்ஸ் அணி. லீக் போட்டிகள் சேலத்தில் ஜூலை 5 முதல் 11 வரையிலும், கோவையில் ஜூலை 13 முதல் 18 வரையிலும், நெல்லையில் ஜூலை 20 முதல் 24 வரையிலும், திண்டுக்கல்லில் ஜூலை 26 முதல் 28 வரையிலும் நடைபெற உள்ளன. ஜூலை 30-ல் முதல் தகுதிச் சுற்றும், ஜூலை 31-ல் வெளியேற்றுதல் சுற்றும் திண்டுக்கல்லில் நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் 2-ல் இரண்டாவது தகுதிச் சுற்றும், ஆகஸ்ட் 4-ல் இறுதிச் சுற்றும் சென்னையில் நடைபெற இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாற்காலிக செயற்கை ஆடுகளம்!
TNPL Cricket

டிஎன்பில் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பேந்தர்ஸ், எஸ்கேஎம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் இரவு 7:15 மணிக்குத் தொடங்கும். ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற்றால் முதல் போட்டி பிற்பகல் 3:15 மணிக்குத் தொடங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com