

தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்ரீகாந்த் , இந்திய அணியின் மீது கொண்ட அக்கறையின் காரணமாக பல ஆலோசனைகளை பொதுவெளியில் வைப்பார். அணியின் செயல்பாடுகள் மோசமாகும் போது கடுமையாக விமர்சிக்கவும் தவற மாட்டார். சமீபத்திய காலத்தில் இந்திய அணி பல்வேறு தொடர்களில் தொடர்ச்சியாக தடுமாறிக் கொண்டு உள்ளது. இந்திய அணி இந்த காலகட்டத்தில் பெற்ற ஒரு சில வெற்றிகளும், ஜிம்பாப்வே, இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற பலம் குறைந்த அணிகளிடம் தான்.
இதே காலகட்டத்தில் பலம் குறைந்த அயர்லாந்து அணியிடம் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து, தொடரை இழந்தது, கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியிருந்தது. இத்தகைய சூழலில், இந்திய அணியை சேர்ந்த முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சுனில் கவாஸ்கர், யுவராஜ் சிங் ஆகியவரைத் தொடர்ந்து தற்போது ஸ்ரீகாந்தும் , இந்திய அணியின் மீதான தனது ஏமாற்றத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில், வைபவ் சூர்யவன்ஷியை புறக்கணித்ததற்கு, அணியின் நிர்வாகத்தினரை மிக கடுமையாக ஸ்ரீகாந்த் தாக்கியுள்ளார்.
ஶ்ரீகாந்த் பேசுகையில் , "15 வயது அதிரடி ஆட்டக்காரரான வைபவ் , ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி, ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதையும் பெற்றிருந்தார். அந்தத் தொடரில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 196.10 என்ற அசாத்திய அளவில் இருந்தது. அந்தத் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை அந்த சிறுவன் வெளிப்படுத்தி இருந்தாலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் , அவர் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. இந்த தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
மேலும் பேசிய ஸ்ரீகாந்த் , " வைபவ் சூர்யவன்ஷியை 3 போட்டிகளிலும் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். அல்லது வைபவ் சூர்யவன்ஷி , சாம்சன், அபிஷேக் சர்மா ஆகிய மூவரையும் தலா இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். இந்த வீரர்களை சுழற்சி முறையில் அணியில் களமிறக்கி இருக்க வேண்டும். இவ்வாறு செய்து இருந்தால் வைபவ் விளையாடி அதிக தன்னம்பிக்கையை பெற்றிருப்பார். ஆனால், அவரை ஓரம் கட்டி தன்னம்பிக்கையை உடைத்து வெறுமனே உட்கார வைத்துள்ளனர்.
அணிக்கு புதிதாக வரும் வீரர்களுக்கு எப்போதும் எளிய தொடர்களில் முதன்மையாக வாய்ப்பு அளிக்க வேண்டும். வீரர்களை சுழற்சி முறையில் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒவ்வொரு வீரரின் திறமையையும் கண்டுபிடிக்க முடியும். இதனால் வைபவிற்கும் விளையாட ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பு அவருக்கு அடுத்த போட்டியில் விளையாட அனுபவத்தை கொடுத்து இருக்கும்.
தற்போது வைபவ் அடுத்த முறை விளையாடும் போது அவருக்கு பல சந்தேகங்கள் ஏற்படலாம். இந்திய அணி நிர்வாகம் ஒரு விதிமுறை பின்பற்றி அர்ஷ்தீப் சிங்கிற்கு ஓய்வு கொடுத்தது. அதே விதியை இந்த மூன்று தொடக்க ஆட்டக்காரர்களுக்கும் பயன்படுத்தி இருக்கலாம். சூர்யவன்ஷியை போன்ற ஒரு வீரரை உருவாக்குவது கடினமானது. அவர் கிரிக்கெட் உலகின் பட்டை தீட்டப்படாத வைரம்.
வைபவிற்கு தன்னம்பிக்கையை அளித்து அவரை, சர்வதேச தரம் வாய்ந்த மிகச்சிறந்த வீரராக மாற்றுவது கிரிக்கெட் உலகில் மிகவும் முக்கியமானது. உலக கிரிக்கெட்டின் மறுமலர்ச்சியே வைபவ் மூலமாகத்தான் இருக்கும்," என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.