என்ன…? இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தாரா பிரதமர்?

Modi and Rahul Dravid
Modi and Rahul Dravid

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றோர் பெயரில் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி என்பது மிகவும் உயர்ந்தப் பதவியாகும். இதற்கு விண்ணப்பிக்க பலரும் போட்டிப்போட்டுக் கொண்டு வருவர். இப்பதவி சிலரின் வெகுக்கால கனவாகவும் இருந்து வருகிறது. அந்தவகையில், இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் ஆவார்.

இவரின் பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பைத் தொடருடன் முடிவடைகிறது. உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் இந்த முக்கிய தொடரானது ஜூன் மாதம் முழுவதும் நடைபெறவுள்ளது. ராகுல் ட்ராவிட் சென்ற ஆண்டு 50 ஓவர்கள் கொண்ட உலகக்கோப்பை தொடருக்குப் பின்னரே ஓய்வுப்பெற்றிருக்க வேண்டும். ஆனால், பிசிசிஐ அவருடைய பதவிக்காலத்தை இந்தாண்டு உலகக்கோப்பை தொடர் வரை நீடித்தது.

ரவிசாஸ்திரிக்குப் பிறகு ராகுல் ட்ராவிட் தலைமைப் பயிற்சியாளராக நவம்பர் 2021-ல் பொறுப்பேற்றார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வென்றிருக்காவிட்டாலும் ஒருநாள், டெஸ்ட், டி20 என்று மூன்று வடிவங்களிலும் நம்பர் 1 இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2022, டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்றது இந்திய அணி.

ட்ராவிடின் பயிற்சியில் 2023, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ரன்னர், 2023, உலகக் கோப்பையிலும் ரன்னர் என அனைத்து தொடர்களிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் இந்திய அணி ஆடிய விதம் அனைவரையும் பெரிதும் ஈர்த்தது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிட்சில் குளறுபடி செய்ததும், கடும் அரசியல் நெருக்கடியினாலும் இந்திய அணி தோற்றது.

அந்தவகையில், டி20 உலகக்கோப்பை தொடருடன் ராகுல் ட்ராவிடின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதற்கு கூகில் ஃபார்ம் மூலமாக அப்ளே செய்யும் வகையில் பிசிசிஐ வசதிசெய்தது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில், மொத்தம் 3000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலும் போலியான விண்ணப்பங்களாக கிடைக்கப்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சேவாக், தோனி உள்ளிட்டோர் பெயரிலெல்லாம் போலியாக விண்ணப்பித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
IPL 2024: வீரர்களும் விருதுகளும்... பக்கா லிஸ்ட் இதோ!
Modi and Rahul Dravid

எப்போதும் போல் இல்லாமல், இந்தமுறை கூகில் ஃபார்ம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதால்தான் இந்த போலி விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றில் தகுதியான விண்ணப்பங்களைத் தேர்ந்தெடுத்து, பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமிக்க வேண்டும் என்று சிலர் கருத்துத் தெரிவித்ததாக கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதை கணிக்கமுடியவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com