ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அந்தவகையில், விராட் கோலியின் ரசிகர்கள் பல வழிகளில் தொல்லைக் கொடுக்கின்றனர் என்று கம்மின்ஸ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
2023ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர்க்கொண்ட உலகக்கோப்பை போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி கோப்பையை கைப்பற்றியது. அதுமுதல், உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்தார், கம்மின்ஸ். அதேபோல் அவர் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில், 20 கோடியே 75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஹைத்ராபாத் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார்.
இவர் தலைமையிலான ஹைத்ராபாத் அணி தொடர் முழுவதும் பல சாதனைகளைப் படைத்ததோடு, இறுதிப் போட்டி வரைச் சென்றது. இதற்கு முன்னர், ஐபிஎல் தொடரின் சம்பளத்தில், கம்மின்ஸ் பாதியை கொரனா நிதியுதவியாக இந்தியாவுக்கு தருவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் இந்திய ரசிகர்கள் தனக்குத் தொந்தரவு கொடுப்பதாக பாட் கம்மின்ஸ் கூறியிருக்கிறார். பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய கம்மின்ஸ், “இந்திய ரசிகர்கள் சிலர் என்னுடைய வீட்டின் முகவரியை கண்டுபிடித்து விட்டார்கள். அதில் சிலர் எனக்குப் பணம் வேண்டும் என்றும், என்னுடைய ஹாஸ்பிடல் பில் இது, எனக்கு உதவி செய்யுங்கள் என்றும் கடிதம் அனுப்பத் தொடங்கினார்கள். இதுபோல் எனக்கு பலமுறை நடந்திருக்கிறது. அதேசமயம் விராட் கோலி ரசிகர்கள் ஒரு படி மேல் இருப்பார்கள். ஒரு முறை நான் விராட் கோலி குறித்து ஒரு கருத்தைத் தெரிவித்தேன்.
அதில் நான் விராட் கோலியை பாராட்டத்தான் செய்தேன். விராட் கோலி ஒரு சிறந்த வீரர், அவர் எங்களுக்கு எதிராக சதம் அடிக்கக் கூடாது என நினைக்கிறேன் என தெரிவித்தேன். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து விராட் கோலி சதம் அடித்தவுடன், ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் என்னை குறிவைத்து திட்ட தொடங்கி விட்டார்கள்.
திடீரென்று என்னுடைய மொபைலுக்கு பல குறுஞ்செய்திகளும் வந்தன. அப்போதுதான் தெரிந்தது விராட் கோலி ரசிகர்கள் என்னை, நான் சொன்ன கருத்துக்காகத் திட்டுகிறார்கள் என்று. இப்படி பல விஷயங்களில், எனக்கு இந்திய ரசிகர்களிடமிருந்து அனுபவம் கிடைத்திருக்கிறது.” என்று பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.