புடாபெஸ்டில் நடைபெறும் உலக அதெலடிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஜெஸ்வின் ஆல்ட்ரின், நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
தகுதிச் சுற்றில் இரண்டு முறை அவர் நீளம் தாண்டுவதில் தவறு செய்தபோதிலும் முதல் முறை அவர் 8 மீட்டர் தொலைவு தாண்டியதை கணக்கில் கொண்டு இறுதிச்சுற்றுக்கு அவர் தகுதி பெற்றதாக அறிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஒரு போட்டியில் ஆல்ட்ரின் 8.42 மீட்டர் தொலைவு தாண்டி சாதனை படைத்திருந்தார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அதெலடிக் வீரர் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
“இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனக்கு நிர்பந்தம் ஏதும் இல்லை. நான் நானாக களத்தில் இறங்கினேன். இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார் ஆல்ட்ரின்.
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 8.37 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிவென்ற முரளி ஸ்ரீசங்கர் தகுதிச்சுற்றில் முறையே 7.74, 7.66 மற்றும் 6.70 மீட்டர் தொலைவு மட்டுமே தாண்டினார். ஒட்டுமொத்த அதெலடிக் வீரர்களில் அவர் 22 வது இடத்தில் இருந்ததால் தகுதி பெறவில்லை.
ஈட்டி எறிதலில் தேசிய சாதனை படைத்த அன்னு ராணி, போராடிய போதிலும் அவரால் தகுதி பெற முடியவில்லை. அவரால் 57.05 மீட்டர் தொலைவு மட்டுமே ஈட்டி எறிய முடிந்தது. ஏ பிரிவில் அவர் 11-வது இடத்தையும் ஒட்டுமொத்த வரிசையில் அவர் 19 இடத்தையும் பிடித்தார்.
இதனிடையே மகளிர் 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் பாரூல் செளதுரி மொத்த தூரத்தை 9 நிமிடம் 24.29 விநாடிகளில் கடந்து இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார்.