

இறப்பு(Death) எல்லோருக்கும் பொதுவான விஷயம் தான். ஆனால், இறப்பை பார்த்து நாம் அதிகமாக பயப்படுகிறோம். மரணம் பற்றி பேசுவதற்கு கூட நாம் தயங்குவோம். வயதான பிறகு இயற்கையாகவே நம் உடலில் உள்ள சக்திகள் குறைந்து, இறத்தல் என்பது எல்லோருக்குமே சாதாரணமாக நடக்கக்கூடிய நிகழ்வு தான். மரணம் வருவதற்கு முன் நம் உடல் சில அறிகுறிகளை காட்டும். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1. மூச்சு இழுப்பதையே மிகவும் ஆழமாக இழுக்க மாட்டார்கள். மிகவும் சோர்வாக காணப்படுவார்கள். அதிகமாக கொட்டாவி விடுவார்கள்.
2. அவர்கள் மூச்சு விடும் போது சத்தம் கேட்கும். அதை Rattling noise என்று சொல்வார்கள். இறப்பை நோக்கி போகிறவர்களின் கடைசி நாட்களில் இதுபோன்ற சத்தம் ஏற்படுவதை கேட்க முடியும்.
3. இறக்கும் தருவாயில் இருக்கக்கூடியவர்கள் அதிகம் தூங்குவார்கள். சில சமயம் பேசிக்கொண்டிருக்கும் போதே தூங்கிவிடுவார்கள். தன்னை சுற்றி நடக்கும் விஷயத்தில் ஆர்வம் இருக்காது.
4. இறப்பதற்கு முன்பு கடைசியாக போகக்கூடிய திறன் எதுவென்றால், நம்முடைய கேட்கும் திறன். இறக்க போகிறவர்கள் கண்களை மூடி படுத்திருந்தாலும் நீங்கள் பேசுவதை கட்டாயம் கேட்டுக் கொண்டு தான் இருப்பார்கள். எனவே, ஆறுதலான விஷயங்களை பேசிக்கொண்டு அவர்கள் கைகளை பிடித்திருந்தாலே அதுவே மிக பெரிய ஆறுதலாக இருக்கும்.
5. இறக்கப்போகும் தருவாயில் இருப்பவர்களுக்கு தங்களை அறியாமல் சிறுநீர், மலம் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியாது. எனவே, படுக்கையிலேயே போய் விடுவது நடக்கும். தசைகள் தளர்வடைவது கடைசி கட்டத்தில் இருப்பதற்கான மிகபெரிய அறிகுறி.
6. இவர்களுக்கு பசி சுத்தமாக இருக்காது. உணவை விழுங்குவதற்கு கூட கஷ்டமாக இருக்கும். அதனாலேயே சாப்பிட மாட்டார்கள்.
7. சில நேரங்களில் அவர்களின் உடலில் இருந்து Nail polish remover ல் வரும் ஒருவித வாசனை வரும். அவர்கள் இறப்பதற்கு காரணமாக கேன்சர், குடல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய் இருந்தால் இந்த வாசனை அதிகமாகவே இருக்கும். உடலில் ஏற்படும் மெட்டபாலிசம் மாற்றத்தினால் இந்த வாசனை வரும்.
8. அவர்களின் கைகள், கால்கள், காதுகள் போன்றவற்றை தொடும் போது ஜில்லென்று இருக்கும். சிலசமயம் கைகளில் வீக்கம் தென்படலாம். இது எதனால் என்றால் உடலில் ரத்த ஓட்டம் குறைந்திருக்கும். வலி அவர்களுக்கு தெரியாது.
9. சிலருக்கு இறப்பதற்கு முன்பு குழப்பம் ஏற்படும். தாங்கள் யார் என்பதை மறந்து விடுவார்கள். தன்னை சுற்றியுள்ளவர்களையும் மறந்து விடுவார்கள்.
10. இறக்க போகும் தருவாயில் இருப்பவர்கள் ஒரு புது எனர்ஜியுடன் எழுந்து உட்காருவார்கள். அதை பார்த்ததும் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இது தற்காலிகமாக நடக்கும். மறுபடியும் அவர்களின் நிலை மோசமாகி இறப்பு நிலைக்கு போகும் வாய்ப்புகள் அதிகம்.
11. பொதுவாக இறப்பு வரும் போது தசைகள் தளர்வடைவதன் காரணமாக வாய் திறந்த மாதிரி இருப்பதும், கண்கள் விட்டத்தை பார்த்த மாதிரி இருப்பதற்கும் காரணம்.
12. இறக்க போகும் தருவாயில் மூச்சு விடுவதை Kussmaul breathing pattern என்று சொல்வார்கள். இதற்கு அடுத்த கட்டம் மூச்சு, இதய துடிப்பு நின்று இறப்பு ஏற்படுகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)