டோபமைன் என்பது மூளையில் உற்பத்தியாகும் ஒரு ரசாயனம். இது நமது மனநிலையை உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. ஆற்றலுடன் செயல்பட துணை நிற்கிறது. டோபமைனை இயற்கையாக அதிகரிக்கும் முறைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
நமது உடலில் டோபமைனின் பங்கு என்ன?
டோபமைன் உடல் செயல்பாடுகள் பலவற்றிலும் பங்கு வகிக்கிறது. உடல் இயக்கம், நினைவாற்றல், மகிழ்ச்சிகரமான மனநிலை, ஊக்கம், நடத்தை, அறிவாற்றல், தூக்கம், உற்சாகம் மற்றும் கற்றல் மனநிலைக்கு உதவுகிறது. ஒருவருக்கு டோபமைன் அளவு குறைவாக இருந்தால், அவர் சோர்வாக, ஊக்கமில்லாத மனதுடன், மகிழ்ச்சியற்றவராக, மனம் அலைபாயும் தன்மையுடன் இருப்பார். தூக்கப் பிரச்னைகளும் இருக்கும்.
டோபமைனை இயற்கையாக அதிகரிக்கும் முறைகள்:
1. டோபமைனை அதிகரிக்கும் உணவுகள்: டோபமைனை உருவாக்க நமது உடலுக்கு டைரோசின் என்கிற அமிலோ அமிலம் தேவைப்படுகிறது. அது பாலாடைக்கட்டி, மீன், இறைச்சி, தானியங்கள், பால், பீன்ஸ், சோயா போன்றவற்றில் அதிகம் உள்ளது. மேலும் காபின் அதிகம் உள்ள காபி மற்றும் சாக்லேட் போன்றவை டோபமைன் சுரப்பை அதிகரிக்கும். பாதாம், ஆப்பிள், வெண்ணெய், வாழைப்பழம், சாக்லேட், பச்சை இலைக் காய்கறிகள், பச்சை தேயிலை, லீமா பீன்ஸ், ஓட்ஸ், ஆரஞ்சு, பட்டாணி, எள் மற்றும் பூசணி விதைகள், தக்காளி, மஞ்சள், தர்பூசணி மற்றும் கோதுமை ஆகியவை டோபமைனை அதிகரிக்கும் உணவுகள் ஆகும்.
2. வாழ்வியல் மாற்றங்கள்: ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்காக உழைத்து அதில் வெற்றி காணும்போது நமது உடல் டோபமைனை வெளியிடுகிறது. புதிய விஷயங்களை ஆர்வமாகக் கற்றுக்கொள்ளும்போதும் டோபமைன் அதிகரிக்கிறது.
3. சூரிய ஒளி: மிதமான சூரிய ஒளியில் 20 நிமிடம் தினமும் செலவிடும்போது டோபமைன் சுரப்பு அதிகரிக்கிறது.
4. ஆழ்ந்த சுவாசம்: ஆழ்ந்த சுவாசம் போன்ற எளிய தியானம் கூட டோபமைன் அளவை அதிகரிக்கும். மூச்சை உள்ளிழுத்து நான்கு வரை எண்ணி, பின்பு அதை வெளியே விடவும். உடனடியாக டோபமைன் அளவு அதிகரிப்பதைப் பார்க்கலாம். தியானம், உடற்பயிற்சி, யோகா, மசாஜ், செல்லப்பிராணியுடன் விளையாடுவது, நடப்பது அல்லது புத்தகம் படிப்பது போன்றவை டோபமைன் அளவை அதிகரிக்க உதவுகிறது.
5. நன்றி உணர்வு: மனிதர்களுக்கும் இயற்கைக்கும் கடவுளுக்கும் நன்றி சொல்லும் போது டோபமைனை மூளை அதிக அளவில் வெளியிடுகிறது. எனவே, சிறிய அளவு நன்மை கிடைத்தாலும் அதற்காக நன்றி சொல்வது உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.